Monday, June 29, 2009

மங்கிய இரவில் சில பதிவுகள்..

நேற்று இரவு ரெயிலில் திருச்சியில் இருந்து பெங்களுருக்கு வந்து கொண்டிருந்தேன். நள்ளிரவை நெருங்கும் அந்த வேளையில், நான் பயணித்துக் கொண்டிருந்த ரெயில் சிறிது நேரம் ஒரு சந்திப்பின் அருகே நின்றுக் கொண்டிருந்தது.. அதே நேரம் பக்கத்து தண்டவாளத்தில் இன்னொரு ரெயிலும் நின்றுக்கொண்டிருக்க, எனது பார்வையை ஜன்னலின் வழியே எதேசையாய் திருப்பினேன்.. மங்கிய ஒளியினூடே அந்த ரெயில் பெட்டியில் கழிவறையின் கதவருகே, சோகம் அப்பிய முகத்துடன் நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண்மணி சிறிய துணி மூட்டையுடன் அமர்த்திருந்த காட்சி, என்னவோ தெரியவில்லை என் மனதை வெகுவாக பாதித்தது..

கலைந்த தலையும், ஒளிவிழந்த முகமும், சற்றே அழுக்கான உடையுடனும் அமர்த்திருந்த அந்த பெண்மணியை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிடலாம், ஆழ்ந்த கவலையுடன் எங்கே போகிறோம் என்றே தெரியாத ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று..

இரவின் மௌனத்தைக் கலைத்து மெல்லிய சலனத்தை மனதினுள் ஏற்படுத்தியது அந்த பெண்மணியின் சோக காட்சி.. எழுந்து போய் அந்த பெண்மணியின் அருகில் அமர்ந்து, 'ஏன் இவ்வளவு சோகம்? மனச்சுமையை பகிர்ந்து கொள்ள ஆளில்லை என்றால் என்னிடம் சொல்லி உங்கள் மனதின் பாரத்தை கொஞ்சம் இறக்கி வையுங்களேன்..' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது..

இரவின் நிசப்தத்தை மெலிதாய் கிழித்துக்கொண்டு எனது ரயில் மெல்லமாய் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியது.. கனமான இதயத்துடன் நானும்..

Wednesday, June 24, 2009

பரவசமும் பாதிப்பும்..

பரவசப்படுத்தும் எந்த ஒரு விசயமுமே என்றாவது ஒரு நாள் மறக்க முடியாத ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.. அதற்காக எந்த சூழ்நிலையையும் அல்லது எந்த மனிதரையும் நம்பாதீர்கள் என்று சொல்ல வரவில்லை நான்.. என்னவோ தெரியவில்லை, எந்த ஒரு நட்போ, உறவோ அல்லது பழக்கமோ பரவசத்தை சில நாட்கள் கொடுத்தாலும், கூடிய விரைவிலேயே அது ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது..

ஒருவேளை அத்தகைய உறவுகள் உள்ளுக்குள் சில எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திவிடுவதாலேயோ என்னவோ அவை மனதிற்கு கொஞ்சம் அவஸ்தையையும் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றன..

நன்றாக பழகும் சிலர் திடீரென்று பழகும் விதத்தில் வித்தியாசம் காட்டும் போது அதை என்னவோ மனம் ஏற்க மறுக்கின்றது.. 'இது இப்படி தான் வாழ்க்கையில் நடக்கும்.. எந்த ஒரு நட்பும் அல்லது உறவும் நிரந்தரமில்லை ' என்று எவ்வளவு தான் தெரிந்தாலும், உணர்வுகளுக்கு அது புரியவா போகின்றது???

என்ன செய்வது!! 'இதுவும் கடந்து போகும்..' என்று பொறுமையாக இருக்க வேண்டியது தான் :-)