கிள்ளி வலித்த பின்பு தான் தெரிந்தது, 'இது கனவல்ல.. நிஜம்' என்று!! உன்னுடனான எனது இந்த நிமிடங்கள்.. எத்தனை நாள் தவமிது..!! இன்று இதோ நீயும் நானும்.. கற்பனைகளிலும் கனவுகளிலும் உலவியதை போலவே பச்சை கம்பளம் விரித்த பூங்காவில் நீயும் நானும் கை கோர்த்த படி நடைபயிலும் இந்த நிமிடங்கள்.. மீண்டும் கிள்ளிப் பார்க்கிறேன்.. நிச்சயமாய் வலிக்கிறது!! இது நிஜம்..
கோபங்களின் சாயல் மறைந்து நீ உதிர்க்கும் அந்த முத்து சிரிப்புகள்.. என் கற்பனைகளின் ஓவியச் சுவடுகள் உயிர்பெற்றெழும் இந்த நிமிடங்கள்.. நிச்சயம் நான் கொடுத்து வைத்தவன் தான்..!! எவ்வளவோ பேசியிருந்தும் நாம் சந்திக்கும் இந்த நிமிடங்களில் ஏனோ தெரியவில்லை வார்த்தைகள் வர மறுக்கின்றன.. குளுமை அப்பிய மென்மையான உன் உள்ளங்கை பற்றும் போது உயிர் தொடும் அந்த உண்மையான மகிழ்ச்சி முதன் முதலில் உணர்கிறேன்..
விரல்கள் பின்னியிருக்க, கண்கள் மௌனமாய் பேசிக்கொள்ள பூங்காவின் இருக்கையில் நாம் வீற்றிருக்கும் இந்த தருணம் அப்படியே உறைந்து போகாதா என்பதான ஏக்கம் உள்ளுக்குள் படரத் தான் செய்கிறது. இந்த கால தேவனுக்கு நம் காதல் பிடிக்கவில்லையா என்ன..? அது ஏன் எப்போதுமில்லாத வேகம் இப்போது மட்டும்..?
நம் சந்திப்பிற்கு அழகு சேர்க்க வானம் வார்த்த மழையின் மெல்லிய துளிகள் நம்மை சுற்றி விழுந்த போது உன்னை போல தான் நானும் பேரானந்தம் கொண்டேன். ஆனால் மழையினது சில துள்ளிகள் உன் மேனி தொடுவதை பார்த்த வினாடியில் பேரானந்தம் பெரும் அவஸ்தையாக மாறிவிட்டது.. "எனக்கே எனக்கான உன் மேல் உட்காரவும் உறவாடவும் என்ன தைரியம் அவைக்கு..?" என்பதான எண்ணம்..
குளிர் பூசிய தேகத்துடன் ஆதவ ஒளியில் மிளிரும் மழையினது மென்மையான சில துளிகளிடம் கூட கனிவு காட்ட முடியாத அளவிற்கு ஆழமானது உன் மேலான எனது பிரியங்களும் காதலும்.. உன் மேலான எனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் எப்போதுமே அகப்பட மறுக்கின்றன.. உன் மீதான எனதன்பை வெளிப்படுத்த நான் முயற்சிக்கும் போதெல்லாம் மொழியினது எல்லை தொட்டு வெறும் கையுடனேயே திரும்புகிறேன்..
சில வினாடிகளில் தானாகவே காற்றில் கரைந்து போய்விடும் என்று தெரிந்தாலும் கூட உன் தேகத்தில் படர்ந்திருக்கும் மழை துளிகளின் மேலான கோபம் குறைவதாய் தெரியவில்லை. முழு முயற்சியுடன் முட்டி மோதி மேலெழும் பொறாமையின் சில துளிகளை கடினப்பட்டு தலை தட்டி உள்ளுக்குள் அடக்குகிறேன்.. காரணம் உன்னையுமறியாமல் மழைத்துளிகளிடம் நீ காட்டும் பிரியங்களுக்காக.. ஆனாலும் நானிருக்கும் போது என்னை கவனிக்க விடாமல் உன் கவனம் கலைத்ததாலோ என்னவோ அந்த நிமிடம் முதல் மழையை எனக்கு பிடிக்கவில்லை..
No comments:
Post a Comment