அதென்ன "த.க" என்கிறீர்களா..? கடைசி பத்தியைப் பாருங்கள். இப்போது நேரே பதிவிற்கு..
நிறக்குருடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ['அப்படீன்னா என்ன..?' என்று கேட்பவர்களுக்காக சிறிய விளக்கம்: காட்சிகள் யாவும் பழைய காலத்து படங்களைப் போன்று கருப்பு வெள்ளையாக மட்டுமே தெரியும் குறைபாடு அது. வண்ணங்களைக் கண்டுக் கொள்ள முடியாத குறைபாடு தான் நிறக்குருடு].. ஆனால் வாசனையை உணர இயலாத குறைபாடு என்று ஒன்றுண்டென்பதை சமீபத்தில் தான் தெரிந்துக் கொண்டேன். கேள்விப்பட்டபோது ஆச்சர்யமாக இருந்தது.
சுவாசிக்க முடியும் ஆனால் காற்றில் கலந்திருக்கும் மணம் (அது நறுமணமாகட்டும் நாற்றமாகட்டும்) நாசிகளுக்கு தட்டுப்படாது. அப்படியொரு குறைபாடென்று ஒன்றுண்டு. அந்த குறைபாட்டை அநோஸ்மியா (Anosmia) என்று சொல்வார்கள். முதன்முதலில் கேட்டப் போது ஆச்சரியமாக இருந்தாலும் கூட, அதை பற்றிய சில தகவல்களைப் படிக்கும் போது தான் தெரிந்தது, 'அடடே.. நாமும் கூட அவ்வப்போது தற்காலிகமாக அதை அனுபவித்திருக்கிறோமே' என்று.
பொதுவாகவே நமக்கு சளி அதிகமாக பிடித்திருக்கும் காலங்களில் பெரும்பாலும் வாசங்களை நம்மால் உணர இயலாது. அதை நீங்கள் கூட அனுபவித்திருப்பீர்கள். வைரஸால் (virus) ஏற்படும் சில நோய்களின் போது நாம் அதை அனுபவித்திருப்போம். ஆனால் நாம் அனுபவிப்பது தற்காலிகமானது. சிலர் பிறந்ததிலிருந்தே 'அநோஸ்மியா'வால் பாதிக்கப்படலாம். அக்குறைபாட்டால் நிரந்தரமாகவே வாசனையை உணரும் தன்மையை பெரும்பாலானவர்கள் இழந்து விடுவதுண்டு.
இக்குறைபாடு உள்ளவர்களைப் பொறுத்தவரை நாசி வழி செல்லும் காற்றானது எவ்வித மணமும் அற்றது. வாசத்தை கண்டுக் கொள்ள இயலாவிட்டாலும் கூட இக்குறைபாடுள்ள பலரால் ருசியை கண்டுக் கொள்ள முடியும். சாப்பிடும் போது சாப்பாட்டின் வாசத்தை அவர்களால் உணர முடியாது. ஆனால் உப்பு, இனிப்பு, காரம் என்பதான சுவைகளை உணர முடியும். இக்குறைபாடுள்ள சிலர் ருசியையும் கண்டுக் கொள்ள இயலாத நிலைக்கு போய்விடுவதுண்டு என்றொரு தகவலும் உண்டு.
இவர்கள் எளிதாக கூவம் நதிக் கரையோரத்தில் நடை பயில முடியும்.. துர்நாற்றங்களில் இருந்து விடுதலை பெற்றவர்கள். இக்குறைபாடுள்ள ஒருவர் நகைசுவையாக சொன்ன விஷயம், "சில நேரங்களில் வகுப்புகளின் போது சிலர் உடம்பிலிருந்து சப்தம் வரும் போது எல்லோரும் சிரித்தவாறே மூக்கை பொத்திக் கொள்வார்கள்.. ஆனால் எனக்கு நடப்பது என்ன என்று தெரியாது.. ஏதோ சப்தம் மட்டும் கேட்குமே தவிர வேறு எதையும் என்னால் உணர முடியாது", என்று.
மனதினை கிறங்கடிக்கும் மல்லிகைப் பூவின் மணம், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சாப்பாட்டின் நறுமணம் என்று எதையுமே இவர்களால் உணர முடியாது. பெரும்பாலும் இக்குறைபாட்டினால் பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும் கூட, சமயலறையில் எரிவாயு கசிவதை இவர்களால் கண்டுக் கொள்ள இயலாது. திடீரென்று வீட்டின் ஓரத்தில் தீப் பிடித்து விட்டதென்றால் புகை வாசத்தை வைத்து இவர்களால் உடனே கண்டு பிடிக்க முடியாது..
நாசியில் ஏற்படும் அடைப்பே ( nasal congestion or blockage of the nose) பெரும்பாலும் இக்குறைபாட்டிற்கு காரணம். ஆனாலும் சில நேரங்களில் இக்குறைபாடு நரம்பமைப்புகளில் ஏற்படும் கோளாறின் (nervous system (neurological) condition) அறிகுறியாக அல்லது தலையிலோ மூளையிலோ இருக்கும் கட்டியின் (tumors of the head or brain) விளைவாகவோ கூட இருக்கலாம். எனவே இக்குறைபாடுள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
இன்னும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) உட்பட நிறைய பிரபலங்களுக்கும் இக்குறைபாடு இருந்திருக்கிறது என்பது தான். முதன் முதலில் கேள்விப்பட்டபோது, 'இப்படியும் ஒரு குறைபாடு உண்டா' என்று ஆச்சர்யமாக இருந்ததால் இதை பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது.
தலைப்பில் இருக்கும் 'த.க' என்பது 'தகவல் களஞ்சியம்' என்பதன் சுருக்கம். ஏதோ தெரிந்த சிலவற்றையும், 'அடடே இது புதுசா இருக்கே' என்று ஆச்சர்யப்பட்ட சிலவற்றையும் பற்றிய ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். அதனால் தான் இந்த தலைப்பு. பிடித்திருந்தால் பின்னூட்டமிட தவறாதீர்கள்..
No comments:
Post a Comment