Saturday, November 20, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (14): ஆண்மையென்பது..?


Photo, originally uploaded by heaven_bound.
மதிய உணவருந்தி வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வரும் வழியில் வீதியோரத்தில் ஒரு வீட்டின் வெளியே பெண்ணொருத்தி தன் குழந்தையை இடுப்பில் சுமந்தவாறே வீதியை வெறித்துப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருக்க, அவள் கணவன் அவளருகே வந்து அவளை உள்ளே வரும்படி கிட்டத்தட்ட மிரட்டும் தோரணையில் அதட்டிக் கொண்டிருந்தான். சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போதே அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் என்று தெளிவாகப் புரிந்தது. அவளை நெருங்கி கடந்து சென்ற போது கலக்கத்துடன் மௌனமாய் நீர் கசிந்துக் கொண்டிருந்த அவளது விழிகளை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. தலைமுடிகள் கலைந்திருக்க அவளது புருவத்திற்கு அருகில் கீறல்பட்டு லேசாக ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. சண்டையில் அவன் அவளை மிகவும் பலமாக அடித்திருக்கிறான் ரத்தம் வருமளவிற்கு..

மனைவியையும் வீட்டிலுள்ள பெண்களையும் கை நீட்டி அடிப்பவர்களை பார்க்கும் போது எனக்கு வரும் கோபத்தை வார்த்தைகள் கொண்டு (அவ்வளவும் கெட்ட வார்த்தைகள்) விளக்கி விட முடியாது.. அவர்களைப் பார்க்கும் போது, "இவனுங்கல்லாம் ஆம்பளைங்களா..?" என்றுத் தோன்றும். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் அருவருக்கத்தக்கவர்கள்.

'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்னும் படத்தில் ஒரு வசனம் வரும். தான் தன் மனைவிக்கு துரோகம் செய்துவிட்ட உண்மையை ஒருநாள் அவளிடம் அவள் கணவன் சொல்லும் போது, அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுப்பாள். அப்போது அவள் கணவன் அவளை சமாதனப்படுத்த முயலுவான். ஆனால் அவள் சமாதானமாகாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல முற்படும் போது, அவன் அவளை தனது பலத்தை உபயோகித்து இழுத்துக் வந்து ஷோபாவில் உட்கார வைத்து சமாதானப்படுத்த முயலுவான். அப்போது அவள், "யூ ஜஸ்ட் யூஸ் ஃபோர்ஸ் ஜஸ்ட் பிகாஸ் யூ ஆர் ஸ்ட்ராங்..?" என்று கேட்பாள். என்னை மிகவும் கவர்ந்த வசனங்களில் ஒன்றது..

அப்படித் தான் இங்கு பல ஆண்பிள்ளைகள் நடந்துக் கொள்கின்றனர். தாம் உடலளவில் வலிமையானவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பெண்களை அடிப்பவர்களையும் அவர்களை சர்வாதிகாரம் செய்பவர்களையும் பார்க்கும் போது, 'இவர்களெல்லாம் என்ன மாதிரியான ஜென்மங்கள்' என்று கூட எனக்கு தோன்றும். உடலளவிலான தனது வலிமையை முன்வைத்து ஒரு பெண்ணை (உடலளவிலோ அல்லது மனதளவிலோ) காயப்படுத்துவது எப்படி ஆண்மையின் குறியீடாக இருக்க முடியும்..?

மென்மையானவள் என்பதற்காக ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துவதும், அவளை உடலளவில் காயப்படுத்துவதும், அவளை கண்ணீர் விட வைப்பதும், அவளது இதயத்தை கிழித்து சுக்குநூறாக்குவதும் நிச்சயமாக ஆண்மையில் மிளிரக்கூடிய அம்சங்களாக இருக்கவே முடியாது. ஆண்மை என்பது பெண்மையை விட பலம் பொருந்தியதாகவோ அல்லது பெண்மையை விட ஏதோ ஒருவகையில் உயர்ந்ததாகவோ நினைத்தீர்களேயானால் அதை விட முட்டாள்தனம் வேறென்ன இருக்க முடியும்..?

தனது எதிர்பாலை கவர்ந்திழுப்பதும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் போது தானே பெண்மையோ ஆண்மையோ அழகு கொண்டு மிளிர்கிறது.

பெண்ணின் உள்ளத்தை நெகிழச் செய்யக் கூடிய, அவள் முகத்தில் புன்னகையை மலர வைக்கக் கூடிய, அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவள் மனதை கவரக்கூடிய குணங்களும் செயல்களுமே ஆண்மையின் அடையாளமாக இருக்க முடியும். அது தான் ஆண்பிள்ளைகளுக்கு அழகும் கூட..

ஆண்மை என்பது பெண்ணின் மனதை கவர்வது. அவளை கண்கலங்க வைப்பதல்ல.. உண்மையான ஆண்மை என்பது அன்பு, நேசம் மற்றும் பாசம் கலந்த ஒன்றே தவிர ஆதிக்கத்தையோ, ஆணவத்தையோ அல்லது உடல் வலிமையையோ முன்னிறுத்தி ஒரு பெண்ணை விட தான் உயர்ந்தவன் என்று சொல்ல முற்படுவதல்ல..

இது என் கருத்து.. உங்கள் கருத்து என்னவென்பதை சொல்லி விட்டுப் போங்கள்..

1 comment:

  1. உண்மையா கரெக்டா சொல்லிடீங்க...

    ReplyDelete