மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Friday, December 10, 2010
குறையொன்றுமில்லை..!!
சமீபத்தில் எதேச்சையாய் பார்த்த குறும்படமொன்று மிகவும் பிடித்திருந்தது. ஒரு நிமிடம் மட்டுமே ஓடும் குறும்படம் அது. 'உடைந்த கடவுள்' என்னும் அர்த்தத்தில் வைக்கப்பட்ட "புரோக்கன் காட்" (Broken God) என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே எனது சிந்தனைகள் ஏதோவொரு திசையில் பயணிக்க தொடங்கி விட்டது.
மேலே இணைக்கப்பட்டிருக்கும் அக்குறும்படத்தின் ஒளிப்பதிவை இணைய வேகம் குறைவின் காரணமாக காண இயலாதவர்களுக்காக அவ்வொளிப்பதிவின் காட்சிகளை கீழே விரித்திருக்கிறேன்.. அதன் பின் நாம் தொடர்ந்து பேசுவோம்.. [ ஒளிப்பதிவைப் பார்த்தவர்கள், கீழே விரித்திருக்கும் அதன் காட்சிகளை பற்றிய பத்திகளைத் தவிர்த்து விட்டு தொடர்ந்து படியுங்கள், அதனால் தான் அவற்றை வேறு வண்ண எழுத்துக்களில் எழுதியுள்ளேன்.. ]
"சார்.. சாமி சிலை பாருங்க சார்.. சாமி சிலை..", என்றவாறே சுவாமி சிலைகளை தள்ளுவண்டியில் வைத்தபடி ஒருவன் விற்றுக் கொண்டிருக்கிறான். தவறுதலாக ஒரு சிலை கீழே விழுந்து உடைந்து விடுகிறது.. பின்னணியில், "குறையொன்றும் இல்லைக் கண்ணா.." என்ற பாடல் ஒலிக்க, "புரோக்கன் காட்" என்கிற தலைப்புடன் படம் தொடங்குகிறது..
"தினமும் இதே வேலை..", என்று குறைபட்டுக் கொண்டே உடைந்த சிலையை எடுத்து வண்டியின் கீழே போடுகிறான்.. அப்போது சிலை வாங்க ஒருவர் வருகிறார்.
"சார்.. சிலை பாக்குறீங்களா சார்.. சிலை..! பெரிய சிலையெல்லாம் இருநூறு ரூவா சார்.. சின்ன சிலையெல்லாம் நூறு ரூவா சார்..", என்று அவரிடம் தனது வியாபாரத்தை தொடர்கிறான்.
உடைந்ததால் வண்டியின் கீழே போடப்பட்ட சிலை ஒன்றை அவர் சுட்டிக் காட்டி, "அத பாக் பண்ணுங்க.." என்கிறார்.
"இதையா.. அது உடைஞ்சிருக்கு சார்..", என்று சொல்லியபடியே அந்த வியாபாரி வண்டியின் மேல் இருக்கும் உடையாத சிலைகளை காண்பித்து, "சார்.. இங்க பாருங்க சார்.. இதெல்லாம் நல்ல சிலைகள் சார்.. அழகழகா இருக்கு சார்.." என்கிறான்.
"அதுவும் அழகா தாங்க இருக்கு.. நீங்க அதையே பாக் பண்ணுங்க.." என்கிறார் அவர்.
"என்ன சார்.. அது உடைஞ்ச சிலை சார்.. அதெல்லாம் யாரும் வாங்க மாட்டாங்க சார்..", என்றவாறே உடைந்த அந்த சிலையை எடுத்து பாக் பண்ணுகிறான்.
"சார்.. ஏதோ உடைஞ்ச சிலைங்கிறதுக்காக ஓசிக்கு எல்லாம் தர முடியாது.. ஒரு அம்பது ரூவா குடுங்க.." என்றவாறே அந்த சிலையை அவரிடம் கொடுக்கிறான். அவர் சிலையை வாங்கிக் கொண்டு அவனிடம் ரூபாய் நோட்டுக்களை கொடுக்கிறார். எண்ணிப் பார்க்கையில் இருநூறு ரூபாய் இருக்கிறது. "என்ன சார்.. இருநூறு ரூபாய் குடுக்குறீங்க..?", என்று வியப்புடன் அவன் கேட்கிறான்.
"வச்சுக்கோங்க.. வச்சுக்கோங்க.. எல்லாம் ஒரே சாமி தானங்க..", என்று சொல்லி விட்டு அந்த சிலையை எடுத்துக் கொண்டு அவர் நடக்க ஆரம்பித்து விடுகிறார். போகும் அவரை அந்த வியாபாரி வியப்பாய் பார்க்கிறான். அப்போது காட்சி மாறுகிறது.. அவர் நடப்பதை காண்பிக்கும் போது தான் தெரிகிறது, அவரால் சாதாரண மனிதனைப் போல நேராக நடக்க முடியாமல் சற்றே சாய்ந்தபடி ஒற்றைக் காலை இழுத்து தான் நடக்க முடியும் என்பது.
அவர் செல்வதை பார்த்தபடியே, அந்த வியாபாரி வண்டியின் கீழே போட்டிருக்கும் உடைந்த சிலைகளை எடுத்து தூசு தட்டி வண்டியின் மேல் மற்ற சிலைகளுடன் சமமாக வைத்து, "சார்.. சாமி சிலை வாங்கிக்கிறீங்களா சார்..?" என்றவாறு தனது வியாபாரத்தை தொடர்கிறான்.
உடைந்த சாமி சிலையொன்று மற்ற சிலைகளுடன் சமமாக ஒருபுறம் இருக்க, மறுபுறம் சாலையில் அவர் சிலையுடன் நடந்து செல்ல, " ஒரு சரிசமமான வாய்ப்பு என்பது மில்லியன் சலுகைகளுக்கு நிகரானது" என்கிற எழுத்துக்களுடன் காட்சி முடிவடைகிறது..
பல லட்சம் சலுகைகள் கொடுப்பதை விட ஒரு சரிசமமான வாய்ப்பு கொடுப்பது எவ்வளவோ மேலானது என்கிற கருத்தை மிகவும் அழுத்தமாக சொல்லும் இக்குறும்படத்தை பார்த்து முடித்தவுடன் நிச்சயமாக பார்த்தவர் மனதில் ஆழமான ஒரு பாதிப்பை இவ்வொளிப்பதிவு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
கைகால் முதல் எல்லாமே நன்றாக இருந்தால் தான் கடவுளையே கண் கொண்டு பார்க்கவும் கையெடுத்து கும்பிடவும் முன் வருகின்றனர் நம் மக்கள் என்று தான் எனக்கு தோன்றியது இப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்தவுடனேயே. எல்லாம் நன்றாக இருந்தால் மட்டுமே கடவுள் என்று சொல்லத் தோன்றுகிறது நம்மவர்களுக்கு. இல்லையென்றால் அது வெறும் உடைந்த சிலையாகி விடுகிறது.. கடவுளுக்கே அந்த கதியென்றால் சாதாரண மனிதனின் நிலையை என்னவென்று சொல்வது..? ஆனால் பணத்திற்கு அந்த கதியில்லை.. எவ்வளவு தான் கிழிந்து இருந்தாலும் அதன் மதிப்பை குறைத்து நம்மவர்கள் எடை போடுவதில்லை..
ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, "ஏன் கடவுள் தரத்தில் (quality) கவனம் செலுத்தாமல் எண்ணிக்கையில் (quantity) மட்டுமே கவனம் செலுத்துகிறார்..?" என்பதான கண்ணோட்டத்தில் "Is God concentrating on quantity than quality..?" என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். மாற்றுத் திறன் பொருந்தியவர்கள் படக்கூடிய கஷ்டங்களை எண்ணி எழுதிய பதிவு அது. "ஒருவரை பார்வையில்லாதவராகவும், மற்றொருவரை கேட்கும் திறன் இல்லாதவராகவும், இன்னொருவரை பேச இயலாதவராகவும் என்று மூன்று மனிதர்களை படைப்பதற்கு பதிலாக எல்லா திறன்களையும் கொண்ட ஒரே ஒரு மனிதனை மட்டுமே நீ படைக்கலாமே..?", என்று கடவுளிடம் கேட்க வேண்டுமென்று தோன்றியது.
அந்த பதிவை படித்துவிட்டு என்னுடைய தோழி ப்ரீத்தி சொன்ன கருத்து நான் நினைத்திருந்த சில விஷயங்களை அப்படியிருக்காது என்று யோசிக்க வைத்தது. இதுவரை சப்தங்களை கேட்டேயிராத ஒருவருக்கு அத்திறன் இல்லாதது பெரிய கஷ்டம் எதையும் கொடுக்காது என்று சிந்திக்க வைத்தது. காட்சிகள் எதையுமே பார்த்தேயிராத ஒருவருக்கு பார்க்க முடியும் என்பது தெரியாதவரை பார்க்க வேண்டும் என்பதான ஆசை கூடத் தோன்றாது. அவரை பொறுத்தவரையில் அது கண்டிராத ஒன்று. நாம் காட்சிகளை பார்த்தே பழகி விட்டதால், "திடீரென்று பார்க்க முடியாமல் போய்விட்டால்..?" என்பதான சிந்தனையில் தான், 'பார்க்க இயலாத அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்' என்று நமக்கு யோசிக்க தோன்றுகிறதே தவிர, உண்மையில் அவர்களும் அதே போல முதலில் யோசிப்பார்களா என்பது சந்தேகமே.
எதற்காக "முதலில் யோசிப்பார்களா" என்னும் வார்த்தைகளை உபயோகிக்கிறேன் என்றால், 'இது ஒரு குறை'யென்றே சிந்தித்திராத அவர்களிடம், "உங்களிடம் இது இல்லை'யென்று நாம் தான் அவர்களை அப்படி பல நேரங்களில் சிந்திக்க வைத்து விடுகிறோம்.
பொதுவாகவே இழப்பென்பதோ குறையென்பதோ இதுவரை இருந்து இப்போது இல்லாமல் போனாலோ அல்லது வேறு ஒன்றுடன் ஒப்பிடப்படும் போதோ மட்டுமே தோன்றுவது. நாம் நம்மை மற்றவர்களுடன் அவ்வாறு ஒப்பிட ஆரம்பித்தோமென்றால் நிச்சயமாக இங்கு இருக்கும் ஒவ்வொருவருமே ஏதோவொரு வகையில் குறைபட்டவர்களே.. சலுகைகள் என்னும் பெயரில், "என்னிடம் இருக்கும் ஒன்று உங்களிடம் இல்லை" என்பதை சொல்லி அவர்களிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாக சிந்திக்க வைக்கவும், குறை கொண்ட ஒருவருக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் தமது புகழை உயர்த்திக் கொள்வதான ஆதாய நோக்கத்துடனேயே தான் இன்று பல விஷயங்கள் நடக்கின்றன.
அதற்காக மாற்றுத் திறன் பொருந்தியவர்களுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நாம் அவர்கள் கஷ்டப்படுவதாக நினைக்கும் சில விஷயங்கள் அவர்களுக்கு கொஞ்சம் சவாலாக இருக்கலாம். ஆனால் அதை எதிர் கொள்ள அவர்களுக்குள் வேறு பல திறமைகள் இருக்கின்றது என்பது தான் உண்மை. அதனால் தான் "மாற்றுத் திறனாளிகள்" என்கிற வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அது தான் சரியான வார்த்தைகள். முதன் முதலில் எனது அலுவலக நோட்டீஸ் போர்டில் "Opportunities for 'differently' abled people" என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த போது, "அடடா எவ்வளவு சரியாக சொல்லியிருக்கிறார்கள்" என்று தோன்றியது. தாம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை தான் யாருமே எதிர்பார்ப்பார்கள். அவர்கள் அதற்கொன்றும் விதிவிலக்கல்லவே..
பின்குறிப்பு: இது என்னுடைய நூறாவது பதிவு.. ஆங்காங்கே சில உப்பு சப்பான மொக்கை பதிவுகளை எழுதியிருந்தாலும் கூட எண்ணிக்கையை கூட்டும் நோக்கத்துடன் அவற்றை நான் எழுதாததால் "நூறு" எண்ணிக்கையை தொட்டதில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு தூரம் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதை விட இன்னும் வெகு தூரம் போக வேண்டும் என்பதான ஆசை எப்போதுமே என் நெஞ்சில் உண்டு. நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் நிச்சயமாக "followers" தான். அதனால் தான் "உயிரூற்றுபவர்கள்" என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். அணைய எத்தனித்த வேளைகளிலெல்லாம் உயிரூற்றிய ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.. பார்ப்போம் இது எவ்வளவு தூரம் தொடர்கிறதென்று!! :-)
Labels:
வகைப்படுத்தப்படாதவை
Subscribe to:
Post Comments (Atom)


Nice.....Keep rocking..
ReplyDeleteநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteபால்
தாம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை தான் யாருமே எதிர்பார்ப்பார்கள். அவர்கள் அதற்கொன்றும் விதிவிலக்கல்லவே..
ReplyDeleteசத்தியமான வார்த்தை :)
விஜய்,
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..!! :-)
சக்தி :-)
ReplyDeleteரொம்ப நன்றி :-))
Really your blogs are too good to read...keep rocking...
ReplyDeleteபாரதி,
ReplyDeleteகருத்துரை கண்டு மகிழ்ந்தேன்!! :) மிக்க நன்றி..!! :)