Monday, November 30, 2009

சார்ந்திருத்தலைப் பற்றியது..

உடலளவிலான சுமைகளை இறக்கி வைக்க பல ஊடகங்களையும் உயிரினங்களையும் எப்படி பயன்படுத்துவதென்று தனது ஆறாம் அறிவின் உதவியால் கண்டு கொண்ட மனிதனுக்கு, மனதளவிலான சுமைகளை இறக்கி வைப்பதெப்படி என்னும் வித்தை இன்னும் விளங்கவில்லை..

தான் ஒரு மேன்மை (superior) பொருந்திய உயிரினம் என்பதனால் தன்னை விட அறிவில் குறைந்த உயிரினங்களை எளிதாக தனது ஆளுமையின் கீழ் கொண்டு வர முடிகின்றது அவனால். அதன் மூலமாக தனது சுய தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள அவன் தயங்குவதில்லை. ஆனால் கட்டுப்படுத்த முடியாமலும், தனது புத்திக்கு விளங்காமலும் அவனது மனம் இருப்பதாலோ என்னவோ, தனது மனச் சுமைகளையும், மனதளவிலான அழுத்தங்களையும், மன வருத்தங்களையும் அவ்வளவு எளிதாக அவனால் கையாள முடிவதில்லை.

தனது மனச் சுமைகளை இன்னொரு உயிரினதிடமோ அல்லது சக உயிர்களிடமோ இறக்கி வைப்பதெப்படி என்னும் சூட்சுமத்தை மட்டும் அவன் கண்டறிந்து விட்டால், இவ்வுலகின் எல்லா மனிதர்களிடமும் சிரிப்பை மட்டுமே காண முடியும் என்பது நிச்சயம். ஆனால் அப்படியொரு வழியை கண்டறிந்து விட்டால் மனிதனை கையில் பிடிக்க முடியாது என்பதாலோ என்னவோ இயற்கை இன்னும் அந்த வரத்தை மானுடர்களுக்கு வழங்கவில்லை.

மன அழுத்தங்களை மற்றவரிடம் இறக்கி வைக்க வழியில்லாவிட்டாலும், மனச் சுமைகளை பற்றி மற்றவரிடத்தில் பேசுவதன் மூலமாக மனதளவிலான வருத்தங்களையும் மன பாரத்தின் அளவையும் குறைக்க முடியும். எனவே தான் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மானிட வாழ்வின் மிக முக்கியமான அம்சமாகின்றது. தனது மனதை நெருடும் விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் போது, மனதின் பாரம் பாதியாக குறைகின்றது.

அதனால் தான் துயரங்களையும் சோகங்களையும் சந்திக்கும் நேரங்களில், தன்னையும் அறியாமல் மனமானது பகிர்ந்து கொள்ள யாரும் கிடைக்கமாட்டர்களாவென்று ஏக்கம் கொள்கின்றது. மனம் தனது சாதாரண நிலையில் இல்லாத கணங்களில், 'உன் பிரச்சனை என்ன?'... 'என்ன தான் உனது கவலை?' என்று யாரவது கேட்க மாட்டார்களாவென்று பல நேரங்களில் காத்துக் கிடக்கின்றது. வேதனையில் உழலும் மனதிற்கு ஆறுதலான வார்த்தைகள் பேச ஆட்கள் தேவை. மனதின் பாரம் முற்றிலும் இறங்காவிட்டாலும் மனம் லேசானதொரு உணர்வை அடைகின்றது.

வாழ்வின் கடினமான நேரங்களில் உடனிருப்பவர்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கின்றது. மனம் சஞ்சலப்படும் கணங்களில் ஆறுதலாக சில வார்த்தைகளைப் பேசுவோரின் மீது சட்டென்று ஒரு தோழமையுணர்வு பற்றிக் கொள்கின்றது. மன வேதனைகளை இலகுவாக்கும் விதமாக பேசி, சற்றே ஆதரவாக தோள் தட்டி 'நானிருக்கிறேன் கலங்காதே!' என்று சொல்லும் உறவுகளும் நண்பர்களும் தன்னோடு எப்போதும் இருக்க வேண்டுமென்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே தான் நெருக்கமான உறவுகளும், நலம் நாடும் நண்பர்களும் பல நேரங்களில் முக்கியமானவர்களாகின்றனர்

ஒரு விதத்தில் பார்த்தால், சுயநலமும் பொது நலமும் சரி பாதியாக கலந்தவையே உறவுகளும் நட்புகளும் என்பது கொஞ்சம் உண்மையும் கூட. வாழ்வின் பயணத்தை எளிதாக்கிக் கொள்வதற்கே பல நேரங்களில் தனது சக உயிர்களுடன் கை கோர்த்துக் கொள்கிறான் மனிதன். கடினமான பாதையில் பயணிக்கும் போது பயணத்தை இலகுவாக்குவதற்கும், வேதனையான தருணங்களை எளிதாக எதிர் கொள்ளவும் துணையொன்று அவனுக்கு தேவை. சில நேரங்களில் இப்படியொரு சார்ந்திருத்தலிற்கான தேவையென்று ஒன்றில்லாமலிருந்தால், மனிதனை கையில் பிடிக்க முடியாது என்பது மட்டுமல்ல, சில உறவுகளிலும் நட்புகளிலும் நெருக்கம் அதிகரித்திருக்குமா என்பதும் அவை இன்னும் தொடருமா என்பதும் கூட ஒரு கேள்விக் குறி தான்..

குறிப்பு: படித்து முடித்ததும் உங்கள் மனதிலென்ன தோன்றுகிறதோ, அதை கருத்துகளாக இங்கே விட்டு செல்லலாமே.. :-)

No comments:

Post a Comment