ஓடிச்சென்று ஜன்னலோர இடம் பிடிப்பதிலும், ஜன்னல் வழி பரந்து விரிந்து கிடக்கும் பசுமையின் அழகினிலும், வேகமாய் பின்னோக்கி நகரும் மரங்களிலும், தூரத்தில் ஆங்காங்கே புதைந்து காணப்படும் சிறிய வீடுகளிலும் என்னை சுற்றி அமர்ந்திருப்போரின் கவனமிருக்க, என் நினைவுகளோ பல மைல்களுக்கு முன்னே கடந்து சென்ற அந்த பொட்டல் வெளியிலும், அதன் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒற்றை பனை மரத்திலும், சற்று முன் கடந்து சென்ற சிறுவர் புத்தகங்கள் விற்கும் அந்த நடுத்தர வயது ஒற்றைக் கை இளைஞனின் 'காணப்படாத' இன்னொரு கையிலும் உறைந்து கிடக்கின்றது.. பெரும்பாலானவர்களின் கவனம் வந்து செல்லும் அப்போதைய காட்சிகளில் இருக்க, என் மனமோ கடந்து சென்ற காட்சிகளையும் வரவிருக்கும் இலக்குகளையும் பற்றியே சிந்தனை செய்கின்றது.
ஏமாற்றங்களாலும் துரோகங்களாலும் கீறல்பட்ட இதயம் சுமந்து, பசியின் காரணமாய் கெளரவம் துறந்து, கலங்கிய கண்களுடன் கையேந்தி நிற்கும் வயோதிகர்களுக்கு கையில் கிடைத்த சில்லறைகளை கொடுத்து விட்டு பலர் நகர்ந்து கொண்டிருக்க, என் மனமோ 'கொடுக்கும் சில்லறை இன்று போதும். ஆனால் நாளைய பசி தீர அவர்களுக்கு போதுமான பணம் கிடைக்குமா..?' என்றெண்ணி கவலை கொள்கிறது.
செடிகளின் இலைகளை செதுக்கிய பின் தோன்றும் நேர்த்தியான அதன் வடிவமைப்பையும் அழகையும் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் கண்களுக்கு மத்தியில் என் கண்களோ செடியின் அழகை மட்டுமல்லாது ஓரத்தில் தள்ளப்பட்டிருக்கும் வெட்டுப்பட்ட இலைகளிலும் கவனம் கொள்கிறது. காதுகளில் கேட்கப்படாத செடிகளின் ஓலம் பற்றியே எண்ண தோன்றுகிறது.. சிலைகளின் அழகில் மெய் மறந்து அதிசயிப்போர் பலர் இருக்க, என் சிந்தனைகளோ சிலையின் அழகில் மட்டுமல்லாது அதனை அழகாக்க தியாகம் செய்து செதுக்கப்பட்ட கற்சிதறல்களையும் சுற்றி வருகின்றது..
இப்படியாக சராசரிகளை மட்டுமல்லாது அவை சார்ந்த கண்களுக்கு புலப்படாத அசாதாரணங்களையும் பற்றி எண்ணுவதாலோ என்னவோ, பல நேரங்களில் மிக சுலபமாக சிந்தனையில் ஆழ்ந்து விடுகின்றேன். மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்ளும் மனிதர்களை பார்க்கும் போது, தன் இனம் சார்ந்த உயிரொன்றை கண்டதை போன்றதொரு உணர்வு என்னை சூழ்ந்து கொள்கின்றது..
அதனால் தானோ என்னவோ, அத்தகைய மனிதர்களை சந்திக்காத கணங்களில், ஏதோ அந்நிய தேசத்தில் வாழ்கின்ற உணர்வும், கண்ணாடி பிம்பம் தவிர வேறொன்றும் தன் இனத்தின் சாயல் பிரதிபலிக்காத உணர்வும் மேலோங்குகின்றன. அவ்வாறான தனிமை சூழ்ந்துகொள்ளும் சில நேரங்களில் கூட ஒரு மாற்றத்திற்காக சாதாரண மனிதனின் சிந்தனைக் கொண்டு அவர்கள் இனத்தில் இணைய என்னால் முடிவதில்லை..
குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)
No comments:
Post a Comment