Tuesday, November 9, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (13)



எதேச்சையாக இந்த ஒளிப்பதிவை பார்க்க நேர்ந்தது.. சிரிக்க வைத்தபடியே சிந்திக்கவும் வைக்கின்ற மிக அருமையான பேச்சு. இன்றைய சூழ்நிலையில் நடக்கின்ற பல விஷயங்களை மிகவும் அழகாக சொல்லிய விதம் பிடித்திருந்தாலும் கூட பார்த்து முடித்தவுடன் சொல்லப்பட்ட சில கருத்துகளுக்கு பதில் தர வேண்டுமென்று தோன்றியதால் தான் இந்த பதிவு..

இன்றைய இளைய தலைமுறை பலவற்றை இழந்து விட்டது என்பதான வாதத்திலே சொல்லப்பட்டிருக்கும் இக்கருத்துக்களை 'இழப்புகள்' என்று வகைப்படுத்தி விட முடியாது.. பணத்தையும் பொருளாதாரத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி தம் வாழ்க்கையை நகர்த்தும் பலர் அதை அடைவதற்கு தாம் எதை விட்டுக் கொடுக்கிறோம் (இழத்தல் அல்ல விட்டுக் கொடுத்தல்) என்று தெரிந்தே செய்கின்ற விஷயமிது. இது அவரவரின் விருப்பத் தேர்வு.. அது தான் உண்மை.

இழப்பென்பது வேண்டுமென்று விரும்பி அரவணைக்க முனைந்தாலும் கூட கைவிட்டு போவது.. இங்கே இழப்பென்று இவர்கள் அடுக்குவது இவர்களாக விரும்பி தேர்ந்தெடுத்தது..

எவ்வளவு தான் வேலையில் மும்முரமாக இருந்தாலும் கூட தம் பால்ய சிநேகிதர்களுடன் தொடர்பில் இருக்கும் பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றனர். அன்பையும் உறவுகளையும் விட்டுக் கொடுத்து விட்டு அசுர வளர்ச்சி பெற முனைவது ஒரு தனி மனிதனுடைய மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களின் விளைவே தவிர அதை இழப்பென்று எப்படி சொல்வது..?

இன்று கற்பனைக்கு கூட எட்டாத அளவிற்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவோ வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றது உறவுகளுடனும் நட்புகளுடனும் ஒருவரை எளிதாக இணைத்துக் கொள்ள.. முன்பெல்லாம் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அஞ்சலட்டை வாங்கி கடிதமெழுதி தபால் பெட்டியில் போட்டால் இரண்டு மூன்று நாட்களாகும் செய்தி போய் சேர.. இன்று அலைபேசி எடுத்து பொத்தானைத் தட்டினால் அதே செலவில் இரண்டு மூன்று நிமிடங்கள் உடனடியாக தாம் சொல்ல நினைத்ததை சொல்ல முடிவதோடு மட்டுமல்லாமல் அதற்கு அவர்களது பதில் என்ன என்பதையும் உடனடியாக தெரிந்துக் கொள்ளும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது.. அப்படியிருந்தும் கூட உறவுகளையும் நட்புகளையும் வளர்த்துக் கொள்ளாதது மனிதனுடைய மனோபாவத்தின் கோளாறென்று சொல்லாமல் அதை இழப்பென்று எப்படி சொல்வது..? நினைத்தவுடன் எளிதாக தொடர்பு கொள்ள தொழில்நுட்பம் கொடுத்துள்ள சாதனங்களை மென்மேலும் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்தாமல் வெட்டியாய் பொழுது போக்க உபயோகிப்பது தனிமனிதனின் முட்டாள்தனமல்லவா..

அக்காலங்களை போல் காதலிக்க முடியவில்லை என்றும் கொடுக்கும் முத்தத்தில் பாதி அலைபேசிக்கு தான் போய் சேர்கின்றதென்றும் வருத்தப்படும் பலர் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் அக்காலங்களில் தொலைதூர காதலியிடம் பேசும் வாய்ப்பெல்லாம் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்ததில்லை என்பதை தான். தொலைதூர உறவுகளுக்கு கடிதமெழுதுவதும் முத்தத்தை அக்கடிதத்திலே பதிப்பதும் தான் அதிகபட்சம் முடியும்.. இன்று தொலைபேசிக்கு அதிகளவில் முத்தங்களை கொடுக்க நேர்ந்தாலும் கூட மறுமுனையில் இருக்கும் காதலி அம்முத்தத்தின் சப்தத்தையாவது கேட்க கொடுத்து வைத்திருக்கிறாளே என்று சந்தோசப்படுவோம்..

தமக்கு நேரம் போதவில்லையென்று பிதற்றிக் கொள்ளும் மனிதர்களை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.. இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவர்கள் கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நேரத்தை மிச்சப்படுத்தி கொடுத்திருக்கிறது.. முன்பெல்லாம் பணமெடுக்க வேண்டுமென்றால் அரை நாள் வங்கியில் வரிசையில் நிற்க வேண்டும். இப்போதோ ஒருசில நிமிடங்களில் ஏ.டி.எமில் பணமெடுத்துக் கொண்டு தம் பொண்டாட்டி பிள்ளைகளுடன் உணவகம் சென்று மகிழ்ச்சியாக அந்த அரை நாள் பொழுதை கழிக்க முடியும்.. முன்பெல்லம் மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் செய்த பல விஷயங்களை இப்போதெல்லாம் நிமிடங்களிலும் வினாடிகளிலும் செய்து முடிக்க முடிகிறது.. அவ்வாறு மிச்சமான பொழுதுகளை தம் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் செலவழிக்காமல் வீணாக்குவதும் மனித உறவுகளின் மீது அக்கறையில்லாதிருப்பதும் தவறான மனோபாவத்தின் விளைவே..

வேண்டுமென்றே தெரிந்தே இது வேண்டுமென்றும் அது வேண்டாமென்றும் சுயமாக முடிவெடுத்துக் கொண்டு 'நான் இதை இழந்து விட்டேன்' என்று போலி முத்திரை குத்துவது எனகென்னவோ சரியாக படவில்லை..

இன்றைய சமூக சூழ்நிலை மிகவும் வேகமான வாழ்க்கைமுறை கொண்டதாக இருந்தாலும் கூட தமக்கு எது முக்கியம் என்று தனிமனிதன் தான் முடிவெடுக்கிறான். குடும்பத்தையும் உறவுகளையும் நட்புகளையும் அரவணைத்தபடியே முன்செல்வதனால் ஒருவனது தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் சற்று மிதமான வேகத்திலே தான் இருக்கும்.. அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது வேலையும் அதில் கிடைக்கும் பதவி உயர்வுகளும் தான் முக்கியம் என்று குடும்பத்தையும் உறவுகளையும் பின்னுக்கு தள்ளுவது ஒருவன் தெரிந்தே சுயமாக எடுக்கும் தேர்வு.. 'இரண்டு வருட பதவி உயர்வுக்கு மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை, எனது உறவுகளுக்கும் நான் சமமான முன்னுரிமை கொடுத்து என் வாழ்க்கையை நகர்த்துகிறேன்' என்னும் மனோபாவத்துடன் வாழ்கின்ற எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கின்றேன்.. அதே சமயத்தில் தனது வேலையும் பதவியும் தான் முக்கியமென்று தம் பொழுதுகளை வேலையிலேயே கழிக்கும் பலரையும் பார்த்திருக்கிறேன்.. இது ஒவ்வொருவரும் சுயமாக எடுக்கும் முடிவு.. பின்னாளில் நான் இதை இழந்து விட்டேன் என்று பிதற்றுவது முட்டாள்தனம்..

எவ்வளவு தான் வேலைபளு அதிகமாக இருந்தாலும் படுக்க போகும் முன் தனது நண்பர்களுக்கோ உறவுகளுக்கோ அலைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்கள் கூட தன்னால் பேச முடியாது என்று ஒருவர் சொல்வாரேயானால் அது சுத்த அபத்தம்.. சீரழிந்து போன மனோபாவத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் தொழில்நுட்பத்தையும் வேகமான வாழ்க்கை முறையையும் நாம் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள நினைக்கிறோம்.. அது தான் உண்மை..

வாழ நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.. அசுர வளர்ச்சியையும் வேகமான பதவி உயர்வுகளையும் கொஞ்சம் சமரசம் செய்துக் கொண்டும் பணத்தின் மீதான மோகம் மட்டுமே கொள்ளாமல் உறவுகளிலும் நட்புகளிலும் நேசம் பாராட்டி வாழ நினைத்தால் வாழலாம்.. இன்றைய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் அதற்கு எவ்வளவோ வழிகளை நமக்கு தருகின்றன.. நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தாமல் தெரிந்தே வீணடித்துக் கொண்டு 'இழந்து விட்டோம்' என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை..

4 comments:

  1. நல்ல ்கிர்வு பால்

    ReplyDelete
  2. Paul ,

    Andha pechil sollapatta yellam little exhagrations, But , sila vishyangal parkka vendiyavai . oru siru udaranam , munbu oruvar deepavali vazhthu madal anupinal adhu perpattavar veetil varudangalukku paramarikka padum , indha vega ulagil sms,vazhthu solla callum seithalum, yedhuvum yaarin pokkishangalilum padukakka mudiyavillayai , uravugallin azhangal ninavugalle . naam ninaivugalai pala madhi izhakkiraom... ninaivugalai nindru niakka neramindri manamindri ,[pala officy thavira diversions iruppadal] izhakkirom . idhu velaikku pokindravargalukku mattumallam veetil irukkum silarukkum porundhum

    ReplyDelete