"மற்றவருக்காக உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்", என்னும் கருத்தை வலியுறுத்த ஜென் கதையொன்றை சொல்வார்கள். அந்த கதையை நீங்கள் படித்திருக்க கூடும். அக்கதையிலிருக்கும் சொல்லப்படாத இன்னொரு கோணத்தை சொல்ல வேண்டுமென்று தோன்றியது எனக்கு. அதனால் தான் இந்த பதிவு..
முதலில் அக்கதையைப் பார்ப்போம்.. அதன் பிறகு தொடர்ந்து பேசுவோம்..
ஒரு துறவியும் அவருடைய சிஷ்யனும் காட்டின் வழியே பயணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். போகும் வழியில் ஒரு ஆறு அவர்கள் கண்ணில் படுகிறது. தாகம் தீர்த்துக் கொள்வதற்காக அந்த ஆற்றை நெருங்கி அதிலிருக்கும் நீரை பருகுகின்றனர் இருவரும்.
நீர்க் குடித்து விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது, தேள் ஒன்று அந்த ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி கவனித்து விடுகிறார். உடனே அதை காப்பாற்றும் பொருட்டு வேகமாக அத்தேளை கையில் பிடித்து கரையில் விட முயற்சி செய்கிறார். நீரை விட்டு வெளியே அந்த தேளை அவர் எடுத்தவுடன் அது அவரை கொட்டி விடுகிறது. "ஆஆ..", என்று சொல்லி தனது கையை அவர் உதற, மீண்டும் தேள் ஆற்றிலேயே விழுந்து விடுகிறது.
அதை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அத்துறவி கரையோரத்தில் கிடக்கும் ஒரு குச்சியை எடுத்து, அதன் உதவியுடன் அந்த தேளை தூக்கி கரையில் விடுகிறார். பின்பு அத்துறவியும் அவருடைய சிஷ்யனும் தொடர்ந்து நடந்து செல்கின்றனர். சிஷ்யனால் நீண்ட நேரத்திற்கு தான் கேட்க நினைத்த கேள்வியை அடக்கி வைக்க முடியவில்லை.
"குருவே, காப்பாற்ற முற்பட்ட உங்களை அந்த தேள் கொட்டிவிட்டதே. பிறகும் எதற்காக அதை காப்பாற்றினீர்கள்..?" என்று அவன் கேட்கிறான்.
"என்ன செய்வது.. கடவுள் அந்த தேளிற்கு அப்படியொரு குணத்தை கொடுத்திருக்கிறான், எனக்கு இப்படியொரு குணத்தை கொடுத்திருக்கிறான்", என்று அந்த துறவி பதிலளிக்கிறார்.
"தீமை செய்வது அந்த தேளின் குணமாக இருக்கிறது என்பதற்காக நன்மை செய்யும் எனது குணத்தை நான் எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும்", என்னும் அர்த்தத்தில் சிஷ்யனிடம் பேசி கைத்தட்டல் வாங்கி விடுகிறார் அந்த துறவி..
ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே இக்கதையை நாம் பார்க்கிறோமோ என்றொரு எண்ணம் எனக்குள் எழுந்தது. நாம் பார்க்கத் தவறும் இன்னொரு கோணமும் இருக்கலாமென்று எனக்குப்பட்டது. "ஒருத்தர் உங்களுக்கு தீமை செய்கிறார்கள் என்பதற்காக உங்களது நல்ல சில குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமே" என்பது நல்ல கருத்தாக இருந்தாலும், கொஞ்சம் அவசரப்பட்டு கருத்து சொல்லி விட்டோமோ என்பதான சிந்தனை எனக்கு வந்தது. சொல்லப்படாத அந்த கதையின் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்..
தண்ணீரில் விழுந்து விட்ட தன் கணவனை எப்படி காப்பாற்றுவது என்று கரையில் துடித்துக் கொண்டிருந்த அந்த தேளின் துணை, துறவி அந்த தேளைக் காப்பாற்றுவதைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்கிறது. காப்பாற்றப்பட்ட தேள் தன் துணையிடம் வந்து அதை கட்டிக் கொள்கிறது.
"உங்க உயிரை காப்பாத்தின அந்த துறவியை எதுக்காக கொட்டினீங்க..?", என்று அந்த தேளிடம் அதன் துணை கேட்கிறது. "என் உயிரை காப்பாத்துற அவருக்கு உடனே நன்றி சொல்லனும்னு தோனுச்சு, அதான் அப்படி செய்தேன். என்னை காப்பாதிட்டாருங்கிற சந்தோசத்துல நாம கொட்டினா அவருக்கு வலிக்குமே அப்படிங்கிறத மறந்திட்டேன்.. விஷம் இல்லாம தான் கொட்டினேன் அவரை.. எனக்கு வேற எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல", என்று சொன்னதாம் அந்த தேள்.
அந்த கதைக்கு இப்படியொரு தொடர்ச்சியை சொல்ல வேண்டுமென்று எனக்கு தோன்றியதற்கு காரணங்கள் உண்டு.
பல நேரங்களிலே, தான் நல்லவன் மற்றும் உயரிய கொள்கைகளை உடையவன் என்பதான ஒரு சிறிய ஆணவம் கலந்த எண்ணங்களும் சிந்தனைகளும் நம்மை சூழ்ந்துக் கொள்வதால் நிகழ்வினுடைய உண்மையான சில விஷயங்களை நாம் கவனிக்காமல் தவறவிட்டு விட வாய்ப்புகள் உண்டு.
தேளின் குணம் எப்போதுமே கொட்டுவது என்று தேளை பற்றிய முத்திரை அத்துறவியினுடைய உள்ளத்தில் பதிந்து விட்டதாலும், தாம் தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்பவன் என்பதான எண்ணம் அவருக்குள் இருப்பதாலும் தான் அவர் சற்று அவசரப்பட்டு தேளின் குணம் அப்படியென்று சொல்லிவிட்டாரோ என்று தோன்றுகிறது. தேள் கொட்டியது வலித்தது என்றாலும் கூட,' நாம் இன்னமும் உயிரோடு நடந்துக் கொண்டிருக்கிறோமே, தேளின் விஷம் ஏன் நம் உடம்பில் ஏறவில்லை", என்று அந்த துறவி யோசித்திருந்தார் என்றால், அந்த தேள் ஒருவேளை அதற்கு தெரிந்த விதத்தில் நன்றி சொல்கிறதோ என்று அவர் சிந்தித்து இருக்க கூடும். அதற்காக முதல் பகுதியினுடைய கருத்து தவறென்று நான் சொல்ல வரவில்லை.
பொதுவாகவே ஒரு மனிதரை, "இவர் கெட்டவர்" என்பதான முத்திரை குத்தி அவரை அந்த கண்ணோட்டத்திலேயே பல நேரங்களில் பார்க்க நம் கண்களும் மனமும் பழகி விடுகிறது. ஒருவரின் குணமறிந்து அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும் கூட, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கும் குணமானது அவர் திருந்தினாலும் கூட நாம் அதை கண்டுக் கொள்ள முடியாமல் செய்து விடக் கூடும்.
எப்போதும் யார் எது செய்தாலும் சூழ்நிலைகளை சற்று ஆராய்ந்து, அவர்கள் அவ்வாறு செய்வதற்கு என்ன காரணமிருக்க கூடும் என்று ஒவ்வொரு முறையும் சற்று உள்ளார்ந்து சிந்தித்து ஒரு முடிவிற்கு வருவது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.. முன்பு நடந்த நிகழ்வுகளின் உதவியுடனோ அல்லது ஒருவர் எப்படிப்பட்டவர் என்று நமது உள்ளத்திற்குள் நாம் கொண்டிருக்கும் முத்திரையின் காரணமாகவோ சூழ்நிலைகளை ஆராயாமல் அவசரப்பட்டு முடிவெடுப்பதை முடிந்தவரை தவிர்ப்போமே..!!
வித்தியாசமான சிந்தனை!!!! பால்
ReplyDeletegreat paul :) superb thought :) awaiting for such great posts from u keep it up :)
ReplyDeleteசக்தி, இந்திரா,
ReplyDeleteமிக்க நன்றி :)
பாசிட்டிவான எண்ணங்கள் இருந்தால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள நாம் தயாராகிவிடுகிறோம்
ReplyDeleteஉங்களுடைய சிந்தனை நல்லாயிருக்கு பால்
நன்றி சிட்டுக்குருவி..!! பறந்து வந்ததற்கும்.. பார்வையிட்டதற்கும்.. பின்னூட்டமிட்டதற்கும்.. :-))
ReplyDeleteNice Post bro..
ReplyDelete:) Thanks KK.. :)
ReplyDelete