Tuesday, December 28, 2010

மழலைப் பருவத்தின் அழகு..!!


Photo, originally uploaded by GOPAN G. NAIR.
இன்று காலை டீ குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன் [ பொதுவாவே வீட்ல தான டீ குடிப்பாங்க, நான் டீ குடிச்சிட்டு வீடு திரும்பினதா சொல்றேனேன்னு நெனைக்குறீங்களா..? வீட்ல டீ போட்டு தர ஆள் இல்லப்பா.. அதான் வெளிய போய் குடிச்சிட்டு வந்தேன் ]. சரி கதைக்கு வருகிறேன்..

அப்போது வீட்டு முதலாளியின் பேரனுக்கு அந்த குட்டிப் பையனது அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் என்னைப் பார்த்ததும், "ஹல்லோ" என்று சொல்வான். அது நான் அவனுக்கு கற்றுக் கொடுத்தது. அவன் கைக் குழந்தையாக இருந்ததில் இருந்தே அவனை தினமும் பார்ப்பேன். அப்போதெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்க மட்டுமே செய்வான், ஏனென்றால் அந்நேரங்களில் அவன் பேச கற்றுக் கொள்ளவில்லை. தினமும் நான் அவனைப் பார்த்து, "ஹல்லோ" என்று சொல்லி அவன் திரும்ப சொல்கிறானா என்று பார்ப்பேன்.. அவன் உதடுகள் முயற்சி செய்யும், ஆனால் வார்த்தைகள் வராது. வெறும் புன்சிரிப்பு மட்டுமே வரும்.. உள்ளம் கொள்ளைக் கொள்ளும் புன்னகை அது.. பிறகு ஒருநாள் அவனைப் பார்த்து வழக்கம் போல் நான் "ஹல்லோ" சொல்ல, பதிலுக்கு புன்னகைத்தவன் தனது பிஞ்சு மொழிகளில், "ஹல்லோ" என்று சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனேன்.

அதற்காக இப்போது அவன் பெரிதாக வளர்ந்து விட்டான் என்று நினைக்காதீர்கள். இன்னமும் அவனுக்கு இரண்டு வயது கூட ஆகவில்லை. இன்று காலை அவனைப் பார்த்ததும் புன்னகைத்தேன்.. அவனாக "ஹல்லோ" சொல்லுவான் என்று எதிர்பார்த்தேன்.. என்னைப் பார்த்ததும் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே, "பைன்" என்றான். எனக்கு சில வினாடிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அது என்ன "பைன்" என்று குழம்பிப் போனேன். என் முகத்திலிருந்த புன்னகையை நழுவ விடாமல், எனது ஒரு புருவத்தை மேல் நோக்கி உயர்த்தி கேள்விக் குறியுடனான முக பாவனையை காண்பித்தேன். அவன் மீண்டும் புன்னகைத்து, "பைன்' என்றான்.

நான் சிரித்தவாறே, "என்ன சொல்கிறான்..?" என்று அவன் அம்மாவிடம் கேட்டேன். "நேத்து நைட் நீங்க 'ஹவ் ஆர் யூ'ன்னு கேட்டீங்கல்ல, அதுக்கு இப்ப பதில் சொல்றான்", என்று அவன் அம்மா கன்னடத்தில் விளக்கம் சொன்னார்கள் [ அவங்க கன்னட மொழி பேசும் குடும்பம் ].. அவனது செயல் என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது.

நேற்றிரவு நான் வீடு திரும்பிய போது அவன் வெளி கேட்டுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். வழக்கம் போல் நாங்கள் பரிமாறி கொண்ட "ஹல்லோ"விற்கு பின்பு, நான் புன்னகையோடு முதன்முறையாக "ஹவ் ஆர் யூ..?" என்று கேட்டேன். அதற்கு எப்படி பதில் சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. வெறும் சிரிப்பு மட்டுமே அவனிடம் இருந்து வந்தது. யாரும் அவனிடம் இதுவரை அந்த கேள்வியை கேட்டதில்லை என்று நான் புரிந்து கொண்டேன். எனக்கு கன்னடம் தெரியாது என்பதால் அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. "குட் நைட்", என்று நான் சொல்ல, பதிலுக்கு அவனும் "குட் நைட்" என்று சொல்லி கையசைத்தான். இதை அவனது அப்பா உள்ளிருந்து பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.

நான் சென்ற பின்பு, "ஹவ் ஆர் யூ..?" என்று யாராவது கேட்டால் எப்படி பதிலளிக்க வேண்டுமென அவனது அப்பா சொல்லி கொடுத்திருக்க வேண்டும். இன்று காலை என்னைப் பார்த்ததும் மறக்காமல் முதல் வேலையாக எனது நேற்றைய கேள்விக்கு அவனாகவே பதிலளித்த அவனது மழலைத்தனம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஹவ் க்யூட் அண்ட் ஸ்வீட்..!! ரொம்பவே மகிழ்ந்து போனேன். நேற்று கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்து கொண்டு, ஞாபகம் வைத்து என்னைப் பார்த்ததும் முதல் காரியமாக அவன் புன்னகையுடன் பதில் சொன்ன விதம்.. ச்ச.. சான்ஸே இல்ல.. மழலைப் பருவத்தில் கொட்டி கிடக்கும் அழகு எப்போதுமே மனதை சொக்க வைக்கிறது. எவ்வளவு பருகினாலும் திகட்டவே திகட்டாத இன்பம் இந்த மழலைத்தனம்.. இன்றைய பொழுது மிக நன்றாகவே விடிந்தது..!!

6 comments:

  1. அருமையான பதிவு.

    Wish You Happy New Year
    நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
    http://sakthistudycentre.blogspot.com
    என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

    ReplyDelete
  2. கருண் குமார்,

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  3. கல்பனா,

    நன்றீங்க :))

    ReplyDelete
  4. அடிக்க அனுப்பிராதிங்க.. :)

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அப்பாதுரை,

    ஹ ஹஹஹா.. அதான் கமென்ட் போட்டுடீங்கள்ள.. அடிக்கல :))

    உங்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete