Saturday, November 21, 2009

நெருக்கமான உறவுகளைக் கொண்டாடுங்கள்..


affection, originally uploaded by digitalsparks.
பல நேரங்களில் மனிதனின் இயல்பென்னவோ சந்தித்திராத அந்நியரிடம் யோசித்து பேசியும், நெருங்கிய உறவுகளிடம் பேசிவிட்டு யோசிக்கவும் செய்து விடுகின்றது.. சொல்லப்படும் வார்த்தைகளை விட சொல்லப்படாத அர்த்தங்களும் வெளிப்படுத்தப்படாத உணர்வுகளும் தான் அதிகம் உற்று நோக்கப்படுகின்றன நெருங்கிய உறவுகளில்.. அதனை அறிய தவறும் கணங்களில் உறவில் ஏற்படும் விரிசல்களை அதன் காரணமறிந்து சரி செய்வதென்பது சற்று கடினமாகவும் போய்விடுகின்றது..

தெரியாமல் செய்துவிட்ட தவறுகள், அறியாமல் சொல்லிவிட்ட வார்த்தைகள், புரியாமல் கேட்டுவிட்ட கேள்விகள்.. இவை அந்நியரிடமிருந்து வரும் போது கோபம் அடக்கி நாசுக்காக சிரித்து அந்த இடம் விட்டு நகரும் மனமோ, அவை நெருங்கிய உறவுகளால் செய்யப்படும் போது ஏற்றுக்கொள்ள இடம் கொடுப்பதில்லை. இதயத்திற்கு அருகிலிருக்கும் மனிதர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகமிருப்பதாலோ என்னவோ பல நேரங்களில் பொறுமையின் அளவு சிறியதாகி விடுகின்றது..

'அந்நியர் சில கணங்கள் நம் வாழ்வில் வருபவர்கள், ஆனால் நெருகியவர்களோ எப்போதும் உடனிருப்பவர்கள்.. நம் உணர்வை வெளிப்படுத்தாவிட்டால் அவர்கள் அதையே திரும்ப திரும்ப செய்தால் என்ன செய்வது?'.. 'என் கோபத்தையும் ஆதங்கத்தையும் அவர்களிடம் காட்டாமல் வேறு யாரிடம் காட்ட முடியும்'.. 'கோபப்பட்டு பேசினாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.. அதையொன்றும் பெரிதாக அவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்'.. இப்படியாக பல நியாயங்களை தனக்கு தானே சொல்லி கொள்வதால் தானோ என்னவோ, அப்படி நடந்து கொள்வதின் விளைவுகளை பெரிதாக உட்கார்ந்து சிந்திப்பதில்லை..

செல்லமாக கோபித்துக் கொள்வதென்பது உறவிற்கு அழகு தான்.. அது கேட்பவர் உள்ளத்தில் புன்சிரிப்பையே வரவழைக்கும். அதுவே வார்த்தைகளின் வீரியம் அதிகமாகும் கணங்களில், அவர்களின் உணர்வுகள் பெரிதாக காயப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்களை நேசிப்பதால் உணர்வளவில் உங்களிடம் அவர்கள் பலவீனமானவர்கள். 'நான் அவர்களை திட்டுவதற்கு எனக்கு உரிமையில்லையா?' என்று நீங்கள் கேட்பதை போன்று தானே, 'நான் நானாக இருந்து தெரியாமல் சில தவறுகளை செய்ய அல்லது சில வார்த்தைகளை பேச எனக்கு உரிமையில்லையா?' என்று அவர்கள் நினைப்பார்கள். கோபப்படாமல் பொறுமையாக எடுத்து சொன்னால் அவர்கள் கேட்கமாட்டர்களா என்ன..?

நம்மோடு எப்போதும் உடனிருந்து, உயிருக்கு உயிராக நம்மை நேசிப்பவர்கள் தானே நமது பொறுமைக்கு மிகவும் தகுதியானவர்கள். நாம் கோபப்படுவது சில நொடிகளே என்றாலும், அதன் தாக்கமும் அதனால் உணர்வில் ஏற்படும் வலியும் நீண்ட நேரம் அவர்களை விட்டு போவதில்லை என்பதே உண்மை.

நெருங்கிய உறவுகளில் குறைவாக கோபப்படுங்கள். அதிகம் பொறுத்து போங்கள். நிறைய அன்பு செய்யுங்கள். அளவில்லாமல் புன்னகையுங்கள். எப்போதும் சிரித்து மகிழுங்கள். அத்தகைய உறவுகளை கொண்டாடுங்கள். அவர்கள் மீதான உங்கள் அன்பையும் அக்கறையையும் பாசத்தையும் நேசத்தையும் வெளிப்படுத்த தயங்காதீர்கள். அவர்கள் உங்கள் உலகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்கு அடிக்கடி சொல்லுங்கள். ஏனென்றால் இதயத்திற்கு நெருக்கமான உறவுகள் வாய்ப்பதென்பது மிக அரிது..

குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)

4 comments: