இடைவெளி அதிகமாகிவிடும் போது நட்புகளில் முன்பிருந்த பழைய எதார்த்தமான உணர்வுகளை திரும்ப பெறுவது சற்று கடினமாகி விடுகிறது. நண்பர்கள் பட்டியலில் பலர் அவ்வபோது தலை காட்டி இடம் பிடித்தாலும், தொடர்ந்து நிலைத்திருப்பவர்களின் எண்ணிக்கை என்னவோ மிகவும் குறைவு தான்.
நன்றாக பேசி 'இவர்கள் நமக்கான நண்பர்கள்' என்னும் உணர்வை ஏற்படுத்துபவர்கள் கூட பல நேரங்களில் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விடுகின்றனர். பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பின்பு மீண்டும் அவர்கள் பேசும் போது முன்பிருந்த அந்த எதார்த்தமான நட்புணர்வு காணாமல் போய்விட்டதை போன்ற உணர்வு வந்து விடுகிறது. ஏதோ ஒரு அந்நிய உணர்வு தலை தூக்குகிறது. பேசும் போது வார்த்தைகளை உள்ளுணர்வுகள் வடிகட்டியே வெளி அனுப்புகின்றன. அன்னியோன்யத்தின் சுவடு லேசாக மறைந்த மாதிரியான எண்ணமே தோன்றுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு என் தோழியொருத்தி என்னிடம் பேசிய போது அப்படி தான் தோன்றியது. நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட, தொடர்பிற்காக எடுத்த முயற்சிகள் சில தோல்வியையே தழுவ, 'ச்சீ..ச்சீ.. இந்த பழம் புளிக்கும்..' என்பதான எண்ணம் மனதிற்குள் புகுந்து கொள்ள, ஏமாற்றம் தழுவும் முன் எதிர்பார்ப்புகளை புதைத்து விட்டு வாழ்வில் முன்சென்று கொண்டிருக்கும் போது, "ஹாய்.. எப்டி இருக்க..?" என்பதாக அவர்கள் மீண்டும் நம் வாழ்வில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்பு நுழையும் போது, மகிழ்வதா அல்லது அங்கிருந்து அகன்று விடுவதா என்பதான ஒரு பெரிய குழப்பம் தான் ஏற்படுகிறது.
அவள் நன்றாக பழகியவள் தான். பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள நல்ல தோழியாக இருந்தவள் தான். எவ்வளவோ பேசியிருக்கிறோம். 'இவள் எனக்கு கிடைத்த நல்ல தோழி' என்பதான எண்ணம் எழுந்த போது, இடைவெளி விழ ஆரம்பித்தது. சண்டையென்று ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கையில் மும்முரமாகிவிடும் போது இடைவெளிகள் விழுந்து விடுகின்றன. அவர்களுக்கு நாம் நட்பளவில் முக்கியத்துவம் அளித்து சில எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளும் போது, அவர்களும் அப்படியே சிந்திக்காத பட்சத்தில் தான் இத்தகைய இடைவெளிகள் விழுகின்றன.
ஆனால் அவர்களுக்கு அத்தகைய இடைவெளி விழுந்த உணர்வுகள் வருவதில்லை போலும். ஒருவேளை அவர்கள் நம்மளவிற்கு அவ்வளவு ஈடுபாடோடு நட்பில் இணையவில்லையோ என்னவோ. ஆனால் ஆழமாக நட்பில் இணைந்து, தெரிந்தோ தெரியாமலோ சில எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டவர்களுக்கு இத்தகைய இடைவெளிகள் வலிக்க ஆரம்பித்து விடுகின்றன. எனவே தான் இடைவெளி அதிகமாகும் போது, 'இனியும் பொறுக்க இயலாது' என்பதால் அவர்கள் அதிலிருந்து வெளியேற ஆரம்பித்து விடுகின்றனர்.
எவ்வளவோ பேசி பழகியிருந்தாலும் கூட, பல நேரங்களில் அத்தகைய நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு அவர்கள் பேசும் போது ஒருசில வார்த்தைகளை தவிர வாயிலிருந்து வேறு வார்த்தைகள் வெளிவர தயங்குகின்றன. 'நீ எப்டி இருக்க..? வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க..? லைஃப் எப்டி போயிட்டு இருக்கு..?' அதற்கு மேல் எதுவும் கேட்க தோன்றுவதில்லை. அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாததால் மௌனம் நீள்கின்றது.
நட்பில் அன்னியோன்யம் இருக்கும் போது மௌனம் அழகான மொழி. ஆழமான நட்புணர்வு உள்ளுக்குள் படர்ந்திருக்கும் பட்சத்தில் மௌனமானது நெருக்கமான உணர்வுகளையே ஏற்படுத்தும். அங்கே மௌனம் என்பது மொழிபெயர்க்க முடியாத அழகான உணர்வுகளின் பரிமாற்றம். ஆனால் இடைவெளிகளுக்கு பின்பு அந்நிய உணர்வு கலந்து விடும் போது அதே மௌனம் உள்ளுக்குள் இறுக்கத்தை தான் ஏற்படுத்துகிறது. இருவர் பேசிக் கொள்ளும் போது மௌனம் அசௌகர்யமான ஒரு சலனத்தை உள்ளுக்குள் ஏற்படுத்தினால் அங்கே நெருக்கமான நட்பு மறைந்து அந்நிய உணர்வு கலந்துவிட்டது என்றே அர்த்தம்.
too good i too had that feel. Really ur wordings are superbb n grt
ReplyDelete