இந்த தனிமை..!! பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா..? எளிதாக சொல்லத் தெரியவில்லை. அதை பற்றி யோசிக்கையில் ஒரு சிறிய குழப்பம் எப்போதுமே மனதிற்குள் எட்டிப் பார்ப்பதுண்டு. ஒருபுறம் கூட்டத்தின் நடுவில் இருக்கும் போது தனித்திருக்க தோன்றினாலும், மறுபுறம் தவிப்புகள் சிலவும் சலனங்கள் சிலவும் வந்து ஒட்டிக் கொள்ளக் கூடிய தனித்திருக்கும் தருணங்களில் அருகில் சிலர் இருந்தால் நலமாக இருக்குமென்கிற எண்ணமும் தோன்ற தான் செய்கின்றது. மனதின் தேவைகள் நொடிக்கொருமுறை மாறிய வண்ணமே உள்ளன.
ஆனாலும் மனதை ஆழ்ந்து கவனிக்கையில், தனிமை ஒருவிதத்தில் பிடித்து தான் இருக்கின்றது. ஆழ்மனதினது சலனங்களை சற்று உற்று நோக்கவும் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்குமென்று சிந்தனைகளை மெல்லுவதற்கும் தனித்திருத்தல் என்பது மிகவும் தேவையான ஒன்றாகி விடுகின்றது.
மற்றவர்கள் அருகிலிருக்கும் போது கட்டுப்பாடோடு இருக்கும் சிந்தனைகள் ஆழ்ந்த அமைதி பூசிய நிசப்தத்தின் நடுவில் தனித்திருக்கையில் தறிகெட்டு ஓடுகின்றன. காரணம் சொல்லத் தெரியவில்லையென்றாலும் கூட எனக்கென்னவோ அத்தகைய தருணங்கள் இப்போதெல்லாம் பிடித்து போய்விடுகின்றன. ஆழ்கடலில் மூச்சைப் பிடித்து உள்ளுக்குள் மூழ்கி முத்தெடுப்பதை போன்ற உணர்வையே அக்கணங்கள் ஏற்படுத்துகின்றன. 'நான்' என்னும் சுயத்தை அறிய உதவுவது அத்தகைய தருணங்களே.
தனித்திருத்தலே நிஜம். அது தான் வாழ்வினது நிதர்சன உண்மை. அங்கே தான் 'நான்' என்னும் சுயம் நிறைந்திருக்கின்றது. அக்கணங்கள் தான் என்னை நானாக எனக்கு காட்டுகின்றன. எனக்கே எனக்கான வாழ்க்கையை வாழ்வதற்கு கிடைக்கும் நிமிடங்கள் அவையே. அங்கே முகமூடி அணிவதற்கோ, போலி ஒப்பனைகள் போட்டுக் கொள்வதற்கோ தேவையில்லை. மற்றவர்களுக்காக அழுகை மறைத்து புன்னகைப்பதற்கோ, 'நான்'னில்லாத நானாக இருப்பதற்கோ அவசியமில்லை. அத்தருணங்களில் தான் எனக்கே எனக்கான என்னுலகத்தில் நானாக இருக்க இயல்கின்றது. அதனால் தானோ என்னவோ 'தனிமை' இப்போதெல்லாம் எனக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
No comments:
Post a Comment