Monday, June 28, 2010

வலி..

sorrow III., photo originally uploaded by *juice.
எதையெதை பற்றியோவெல்லம் சிந்திக்கின்றது மனம். 'நலமா...?' என்பவர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியவில்லை. சாய்ந்தழ ஒரு தோளில்லையே என்பதான ஏக்கம் எப்போதும் எட்டாத உயரத்தை அடைந்துள்ளது. 'நமக்காக' என்பதாக நாம் நினைத்த சிலர் நம்மை விட்டு அகலும் போது, என்ன தான் முதிர்ச்சியடைந்த சிந்தனைவாதியாய் இருந்தாலும் கூட, சற்று தடுமாறி தான் போய்விட நேர்கிறது.

'நமக்கான உலகம் இவர்கள்' என்பதான சிந்தனையோடு வாழ்க்கையை நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது 'எனக்கான உலகம் வேறு' என்பதாக பின்னாளில் அவர்கள் நம்மிடம் சொல்வார்களேயானால், அத்தகைய தருணங்களை கையாள்வதென்பது சற்று முடியாத காரியமே. கடினப்பட்டு கட்டியெழுப்பிய கோட்டையின் மையத்தூண் சட்டென்று வழுவிழந்து சாய்வதை போன்று தான் வாழ்க்கை ஆகிவிடுகிறது அந்த நொடிகளில்.

தெரிந்த தவறையே திரும்ப திரும்ப செய்வதில் நம்மை மிஞ்சுபவர்கள் நாம் மட்டுமே. வாழ்க்கையில் என்ன தான் அடிபட்டாலும், மீண்டும் மீண்டும் மற்றவர்களை நமது வாழ்க்கையின் மையமாக வைத்து கோட்டையை எழுப்புவதும், பின்னாளில் நம்பிக்கை மோசத்திற்கு இலக்காவதுமாக நம் வாழ்க்கை ஏன் இப்படி போய்க் கொண்டிருக்கிறது..? ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் ஒரே நேரத்தில் எழுந்து நிற்கின்றன. அனுபவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விடைகளென்னவோ அகப்படுவதேயில்லை.

இம்முறைப் போல, சில நேரங்களில் அடி கொஞ்சம் பலமாகவே விழுந்து விடுகிறது. எழுந்து நிற்க முடியாவிட்டாலும் கூட எதிரில் இருப்பவர்களின் உள்ளம் சுருங்கக் கூடாது என்பதற்காக போலியாய் உதடு விரித்து புன்னகைக்கிறேன். மார்பில் துளையிடாது உள்ளுக்குள் பதம் பார்த்த வார்த்தைகள் சிலதின் ஆறா ரணங்களும் அவை சார்ந்த வலியின் சாயங்களும் தன்னையும் மீறி கலந்து விடுமோ என்கிற பயத்தின் காரணமோ என்னவோ அப்புன்னகைகளின் போது உதடுகளின் ஓரப்பகுதிகள் கொஞ்சம் தந்தியடிக்கின்றன..

2 comments:

  1. the useful ideas u presented do help the investigation for my company, thanks.

    - Lucas

    ReplyDelete