எப்போதுமே உணர்ந்த தனிமை தான்.. ஆனால் எப்போதுமில்லாத வலி இப்போது மட்டும்!! வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட எல்லோருமே கண்டு கொள்கிறார்கள் 'இவனுக்கு என்னமோ ஆகிவிட்டதென்று'.. ஒருவேளை வெளித்தோற்றம் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறதோ..
இப்போதெல்லாம் 'என்னாயிற்று' என்பதான கேள்விகளே அதிகம் காதில் விழுகின்றன. கேள்வி கேட்போருக்கு பதிலளிக்க தெரியாமலில்லை.. பதிலளிக்க தோன்றுவதில்லை.. அதிகபட்சம் ஒரு புன்னகை மட்டுமே.. அதுவும் எனக்காகவல்ல.. அவர்களுக்காக!!
வீழும் வேளையில் கயிறொன்று கைகளில் தட்டுபட, உயிர் பிழைத்தோமென்று சுவாசக்காற்றை உள்ளிழுக்கும் போது, விதியின் விளையாட்டாலோ அல்லது யாரோ ஒருவர் செய்த வினையின் விளைவாகவோ அக்கயிரின் மறுமுனை அறுபட்டு விடை கொடுக்கவே, தளர்ந்திட்ட நம்பிக்கையுடன் செய்வதறியாது தரை நோக்கி கீழ் விழும் நிலையை ஒத்தது தான் என் நிலையும்..
இதுவரை மனதின் ஓரத்தில் தேங்கியிருந்த வீராப்பும், தைரியமும், மீண்டு மேல்நோக்கியெழும் அந்த வெறியும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதில் கொஞ்சம் ஆச்சர்யமே.. பல விஷயங்கள் இப்போது பொருள்படுகின்றன.. படிப்பினைகளுக்கு குறைவேயில்லை.. என்ன.. படிப்பினைகளின் அளவு மிக அதிகம்.. ஏற்றுக் கொள்வதற்கு தான் மனதில் இடமில்லை..
No comments:
Post a Comment