Wednesday, August 4, 2010

நான் வருகிறேன்..

உள்ளுணர்வுகள் யாவும் உயிர் பெற்று ஏதோ சொல்ல முயல, என்றும் போலல்லாது அன்று அவற்றை அலட்சியப்படுத்துகின்றேன்.. அடி எடுத்து வைத்த காரியம் அவசரமானது மட்டுமல்ல.. என் வாழ்வின் மிகவும் அவசியமான ஒன்றும் கூட. 'பயந்தால் இனி பூமி பந்தில் பங்கில்லை' என்பதாக ஏதோவொரு உள்குரல் சப்தமிட, இனியும் தாமதிக்கலாகாது என்பதான எண்ணமே மேலோங்குகின்றது..

எவ்வளவு காலம் தான் தயக்கத்தின் தடுமாற்றத்திற்கு தீனிப் போடுவது..? தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் தரணியிலான பொழுதின் கணக்கு கரைந்து கொண்டே போகின்றது என்பதை உணர்ந்த பின்னும் கூட எவ்வாறு அமைதி காப்பது..? 'பொறுத்திருந்தேன் அதனால் பொங்கி எழுகிறேன்' என்பதாக நான் சொல்லவில்லை. பொடி நடையாக இனியாவது முன்னோக்கி நகரலாமே என்பதான எண்ணம் தான்.. வேறொன்றும் இல்லை..!!

ஏதோவொரு நம்பிக்கையில் பயங்களை பின் தள்ளி பயணத்தை தொடங்கிவிட்டேன். நடத்துனர் வருகின்றார்.. சிரித்த முகத்துடன் இலக்கென்னவென்று வினவுகின்றார்.. புதைத்து வைத்திருந்த தயக்கத்தின் ஒரு சொட்டு நாவின் நுனியில் வேகமாய் வந்து ஒட்டிக் கொள்ள எனக்கும் அவருக்கும் மட்டும் கேட்குமான குரலில் போகத் துடிக்கும் இலக்கின் பெயர் சொல்கின்றேன். சிரித்தபடி சில்லறையுடன் பயணச் சீட்டையும் தருகின்றார். பதிலுக்கு புன்னகைக்க சொல்லும் உணர்வொன்றை சட்டை செய்யாது உறைந்து போய் இருக்கின்றன உதடுகளும் விழிகளும்..

பின் மண்டையில் பாதிக்கும் மேல் சிதறிக் கிடப்பது முன் நிற்கும் காரியம் பற்றிய சிந்தனைகளே.. சன்னமான இரைச்சலுடன் முன்னோக்கி நகரும் பேருந்தின் இதயம் என் மனதின் அப்போதைய நிலையை அப்படியே பிரதிபலிக்கின்றது..

காத்திருத்தல் இதோ கரைய தொடங்கிவிட்டது.. காணத் துடித்த ஒருவர் முகம் ஒருவர் காண்போம்.. கண்கள் கலப்போம்.. அருகாமை உணர்வோம்.. உரையாடுவோம்.. உலகம் மறப்போம்.. உவகை கொள்வோம்.. உயிர் உணர்வோம்.. விரல்கள் பின்னி உள்ளங்கை பற்றுவோம்.. கற்பனைகளும் கனவுகளும் இனி நிகழ்வுகளாகும்.. உனதாகவும் எனதாகவும் மட்டுமே இருந்த பொழுதுகள் இனி நமதாகும்.. இனி நீ தனியாகவோ தவித்திருக்கவோ வேண்டியதில்லை.. உனக்காக.. எனக்காக.. நமக்காக.. இதோ நான் வருகிறேன்..!!

No comments:

Post a Comment