அது ஒரு குளிர்கால மாலை நேரம். மிதமாக வீசிக் கொண்டிருந்த வெயில் வடிந்திருந்த போதிலும் வெளிச்சத்தின் சுவடு இன்னும் மிச்சமிருந்தது. வேலைகள் அதிகமில்லாததால் சீக்கரமே வீட்டிற்கு கிளம்ப முடிந்தது. பெரும்பாலானவர்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் அந்நேரத்திற்கு சாலையில் போக்குவரத்து கணிசமாக அதிகரித்திருந்தது. என்றாலும் கூட பைக்கை ஓட்டுகையில் தேகத்தில் மோதும் எதிர்த்திசைக் காற்றில் குளுமை கலந்திருந்தபடியால் எப்போதும் மனதிற்குள் எழும் சலிப்பும் எரிச்சலும் அன்று எழவில்லை. அம்மாலை நேரத்துக் குளிர்க்காற்று ரொம்பவே பிடித்துப் போய்விட்டதால் தலைக்கவசத்தில் இருந்த முகம் காக்கும் கண்ணாடியை மேலே தூக்கி விட்டபடி பொழுதில் கலந்திருந்த அழகையும் தேகத்தில் மோதும் காற்றையும் ரசித்தவாறே பைக்கை மிதமான வேகத்தில் வீடு நோக்கி செலுத்தினேன்.
பாதி தூரம் வந்திருப்பேன். ஆம்புலன்ஸ் ஒன்றின் சைரன் சப்தம் எனக்கு பின்புறம் தொலைதூரத்திலிருந்து லேசாய் கேட்க ஆரம்பித்தது. சைரனை அலறவிட்டபடியே வரும் ஆம்புலன்ஸ் எப்போதுமே எனக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அன்றும் அப்படித் தான். தூரத்தில் கேட்ட சைரன் சப்தம் சில வினாடிகளில் அதிகரித்தவாறே என்னை நெருங்க, 'வேதனையில் யாரோ' என்று நெஞ்சுக்குள் படபடப்பு அதிகரித்தது. சாலையின் நடுவில் போய்க் கொண்டிருந்த வாகனங்கள் சில இடதுபுறம் ஒதுங்கி வழிவிட, இன்னும் சில வாகனங்களோ எனகென்னவென்று போய்க் கொண்டிருக்க மிகவும் சாமர்த்தியமாக கிடைத்த இடைவெளியில் முடிந்தமட்டும் வேகத்துடன் சீறி முன்சென்றது அந்த ஆம்புலன்ஸ்.
அந்த ஆம்புலன்ஸ் என்னை கடந்த சில வினாடிகளிலேயே டிராஃபிக் சிக்னல் ஒன்று வந்து விட்டது. நாங்கள் செல்ல வேண்டிய வழியில் சிகப்பு விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்ததால் எல்லா வாகனங்களும் தேங்கி நின்றிருக்க வழி கிடைக்காது சைரனை அலறவிட்டபடியே என்ஜினை உறுமிக் கொண்டு பின்னால் தங்கி விட்டது. என் பைக்கையும் அதன் அருகிலேயே நிறுத்தும்படியாகி விட்டதால் அந்த சைரன் சப்தம் என் காதுகளை நிரப்ப, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உயிர் போகும் அவஸ்தையை உள்ளுக்குள் என்னால் உணர முடிந்தது. 'போக முடியாம நிக்குதே ஆம்புலன்ஸ்', என்று என் மனதிற்குள் ஒரு பதற்றம் பற்றிக் கொண்டது.
ஆம்புலன்சின் உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமென்று தோன்ற, பைக்கில் அமர்ந்தபடியே லேசாக எம்பி அதன் கண்ணாடி ஜன்னல்களை பார்க்க முயன்றேன். திரை சீலை மூடியிருக்க, லேசாக விலகியிருந்த ஓரத்தில் வெள்ளையுடையில் யாரோ வீற்றிருப்பது தெரிந்தது.
"அதான் ஆம்புலன்ஸ் இப்புடி அலறுதே. சட்டுன்னு இந்த சைடுக்கு கிரீன் சிக்னல் போட வேண்டியது தான..", என்று என் மனதிற்குள் தோன்றியது. சிக்னலில் டிராபிக் போலீஸ் யாரும் தென்படுகிறார்களா என்று சாலையை மேய்ந்தேன். அப்படி யாரும் என் கண்களில் தட்டுப்படவில்லை. சற்று உற்றுப் பார்த்ததில் சிக்னலில் நின்று போக்குவரத்தை கவனிக்க வேண்டிய ட்ராஃபிக் போலீஸ்காரர் ஒருவர் சற்று தொலைவில் தள்ளி நின்றபடி வேலை நேரத்தில் அலைபேசியில் கதையளந்துக் கொண்டிருந்தது தெரிந்தது. எப்போதும் கொஞ்சமாக வரும் கோபம் அன்று சற்று அதிகமாகவே வந்தது. 'பொறுப்பில்லாத நாய்ங்க', என்று மனதிற்கு திட்டினேன்.
நான் மனதிற்குள் திட்டியது அருகிலிருப்பவன் காதில் விழுந்து விட்டது போலும். நான் திட்டி முடிப்பதற்குள், "யூஸ்லெஸ் ஃபெல்லோஸ், இவனுகளையெல்லாம் கட்டி வச்சு அடிக்கணும். வேலைய பாக்காமா போன்ல எவகிட்டயோ கொஞ்சிகிட்டு இருக்கான் பாரு. பாஸ்டர்ட்..", என்று சப்தமாகவே அவன் சொன்னான். சொன்னதோடு நில்லாமல் ஹார்னை விடாமல் அழுத்தவும் ஆரம்பித்தான்.
'என்னை விட உணர்ச்சிவசப்படுபவன் போல', என்று எனக்குள்ளேயே நான் சொல்லிக் கொண்டேன். அவனோடு சேர்ந்து நானும் என்னால் முடிந்த எதையாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. எனது பைக்கின் ஹார்னை நானும் விடாது அழுத்த ஆரம்பித்தேன். ஏற்கனவே அலறிக் கொண்டிருக்கும் சைரன் சப்தத்துடன் எங்களது ஹார்ன் சப்தமும் சேர்ந்துக் கொண்டு எங்களுக்கு முன்னால் இருந்த சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்த முகத்தை சுளித்துக் கொண்டு சிலர் எங்களைத் திரும்பிப் பார்த்தனர். என் அருகில் இருந்தவனோ ஆம்புலன்சை கை காட்டியபடியே முன்னாடி செல்லுங்கள் என்பதாக அவர்களுக்கு சைகை செய்தான். பலர் அதை அலட்சியப்படுத்தி மீண்டும் திரும்பிக் கொள்ள, அவர்களில் சிலர் எங்களுடன் சேர்ந்துக் கொண்டு ஹார்னை அழுத்த ஆரம்பித்தனர். நிச்சயமாக எங்களது ஹார்ன் சப்தம் ஆம்புலன்சின் சைரனை விட பெரிதாக எழவில்லையென்றாலும் கூட எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை செய்கிறோம் என்பதான நிறைவு நெஞ்சுக்குள் ஏற்பட்டது.
சிக்னலின் முன் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த வாகனங்களில் சிலவும் எங்களோடு சேர்ந்துக் கொண்டன. பீறிட்டு எழுந்த ஆம்புலன்சின் சைரனும், பல வாகனங்களின் ஹார்ன் சப்தங்களும் அலைபேசியில் ஒன்றியிருந்த போலீஸ்காரரின் கவனத்தை கலைத்தது. அப்போது தான் ஆம்புலன்ஸை கவனித்ததை போன்று பாவனை செய்தபடி போலிப் பதற்றம் உடம்பில் தொற்றிக் கொள்ள வேகமாய் ஓடி வந்தவாறே கிரீன் சிக்னல் விழுந்து போய்க் கொண்டிருந்த வாகனங்களை கைக் காட்டி நிறுத்திவிட்டு எங்கள் பக்கம் பச்சை விளக்கு ஒளிரும்படியாக சிக்னலை மாற்றினார்.
இதனிடையில் ஆம்புலன்சிற்கு எப்படியும் வழி கிடைத்து விடும் என்பதால் அதன் பின்னாலேயே போனால் போக்குவரத்து நெரிசலை எளிதாக தவிர்த்து சென்று விடலாம் என்னும் எண்ணத்துடன் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க, 'என்ன மனுஷங்களோ..?' என்றொரு எண்ணம் என் மனதிற்குள் எழுந்தது.
'உயிருக்கு ஒருத்தன் போராடிட்டு இருக்குறப்ப கூட அதுல நமக்கு என்ன அட்வாண்டேஜ் இருக்குன்னு எப்புடி இவங்களால இப்புடி சுயநலமா யோசிக்க முடியுது', என்று தோன்றியது.
கிரீன் சிக்னல் கிடைத்ததும் முன்னால் நின்றிருந்த வானங்கள் பல வேகமாக சாலையின் ஓரத்திற்கு ஒதுங்கி ஆம்புலன்ஸ் போக வழி விட்டுக் கொண்டிருக்க ஒரு சில வாகனங்கள் மட்டும், 'இது தான் சான்ஸ்' என்று கிடைத்த வழியில் ஆம்புலன்ஸை முந்திக் கொண்டு போகும் நோக்கத்துடன் வழிவிடாமல் வேகமாக சீறிப் பாய்ந்தன.
'இவனுங்கல்லாம் என்ன ஜென்மங்க. எப்புடி இவனுங்களால இப்படிலாம் நடந்துக்க தோணுது..?', என்று ஆதங்கப்பட்டது மனது. 'உயிருக்கு போராடிட்டு இருக்குற இன்னொரு மனுஷனுக்கு கொஞ்சம் ஒதுங்கி வழிவிட கூட முடியாத அளவுக்கு அப்புடியென்ன அவசரம் இவனுங்களுக்கு..?', என்று எனக்கு தோன்றியது..
"இவனுங்கள எல்லாம் திருத்தவே முடியாது. அவனவனுக்கு வந்தா தெரியும்", என்று அவர்களை நான் மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்கும் போதே, கிடைத்த வழியில் ஆம்புலன்சை முந்திக் கொண்டு வேகமாக சீறிப் பாய முயன்ற பைக் ஒன்று லேசாய் தடுமாற, அதை சீர் செய்வதற்காக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவன் வேகத்தை சட்டென்று குறைத்தான். கிடைத்த வழியில் அவனைத் தொடர்ந்து சீறிப் பாய முயன்ற கார் ஒன்று அவன் வேகத்தை குறைப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காததால் வேகமாக முன்னோக்கி சென்று அந்த பைக்கை பின்புறம் லேசாக தட்ட, தடுமாறிய பைக்கை நிலைப்படுத்த முயன்று, முடியாமல் தோற்றுப் போய், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நிலைகுலைந்து கீழே சரிந்தான். பைக் ஒருபுறம் சரிய அவனோ தூக்கி எறியப்பட்டு தனது உடம்பை சாலையில் தேய்த்துக் கொண்டே தூரப் போய் விழுந்தான்.
சட்டென்று கிறீச்சிட்ட பிரேக் சப்தங்கள்.. சின்னதாய் ஒரு அலறல்.. தொடர்ந்திட்ட பதற்றம்.. பதறியபடியே அவனைத் தூக்க ஓடிய காலடிகள்.. ஸ்டைலுக்காக தாடையை காக்கும்படியான தலைக்கவசம் அணியாமல் வெறும் தலையை மட்டுமே மூடும் தொப்பி போன்ற தலைக்கவசத்தை அவன் அணிந்திருந்ததால் விழுந்ததில் தாடைப் பகுதி பிளந்திருக்க நிறைய ரத்தத்தை சாலையில் கொட்டியவாறே கீழே கிடந்தான். அவனது உடம்பின் கைகால் மூட்டுப் பகுதிகளில் சதை பிய்த்தெறியப்பட்டிருக்க, எல்லா இடங்களிலும் ரத்தம் வேகமாய் வடிந்துக் கொண்டிருந்தது. அவனால் எந்திரிக்க முடியவில்லை. வலியில் கொஞ்சம் சப்தமாகவே முனகினான். கிட்டத்தட்ட நினைவிழக்கும் தருவாயிலிருந்தான்.
நடந்திட்ட விபத்தின் நிமித்தம் முன்செல்ல முடியாது அந்த ஆம்புலன்சும் அங்கேயே நின்று விட்டதால், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சிலரின் உதவியுடன் அவசர அவசரமாக அவன் அந்த ஆம்புலன்சிலேயே ஏற்றப்பட, சைரனை வேகமாக அலறவிட்டபடியே கிளம்பிய ஆம்புலன்சை முந்திக் கொண்டு போக இம்முறை யாரும் சீறிப் பாயவில்லை. எல்லா வாகனங்களும் ஒதுங்கி வழிவிட எளிதாக முன்னோக்கி வேகமாக சென்றது அந்த ஆம்புலன்ஸ்.
பட்டால்தான் இவனுங்களுக்கெல்லாம் புத்தி வரும்... நல்ல பகிர்வு நண்பா, நானும் ஆம்புலன்ஸ் பின்னாடி போய் அட்வாண்டேஜ் எடுத்து கொள்பவர்களை மனதில் திட்டு இருக்கிறேன்....
ReplyDeleteபட்டா தான் புத்தி வரும் போலயே
ReplyDeletepadikum poathe manasu kashtam erukku paul....
ReplyDeleteநன்றி அருண்'s..!! :)
ReplyDeleteநன்றி சக்தி..! :)
உணராதவர்கள் நிலை மோசமாக ஆகலாம்!
ReplyDelete