வாழ்வினது நிகழ்வுகள் பல நேரங்களில் புரிந்து கொள்வதற்கில்லை. 'எதற்காக அவை நிகழ்கின்றன.. நமக்கு என்ன சொல்ல அவை முற்படுகின்றன..' என்பதான கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில்கள் கிடைப்பதில்லை. நிகழ்வுகளுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. அர்த்தங்களை கண்டறிய முற்படுவதென்பது புதைக்குழியில் கால் பதிப்பதை போன்றது. தரை தட்டுமென்று நினைத்து கால் வைத்தால் உள்ளுக்குள்ளேயே புதைந்து போகவேண்டியது தான்.
ஒருவகையில் அவை 'மாடர்ன் ஆர்ட்' என்று சொல்லப்படும் நவீன ஓவியங்களை போன்றவை. ஒன்றுமே புரியவில்லையென்றாலும் கூட ஏதோ புரிவதாக நடித்து, ரசிப்பதாக காட்டிக் கொள்வதை போன்று தான் வாழ்க்கையை வாழ வேண்டியதாகி விடுகிறது. பொருள் புரிந்துக் கொள்வதற்காக ஒரு ஓரமாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. எவ்வளவு தான் சிந்தித்தாலும் 'ஏன்.. எதற்கு.. என்ன.. எது..' என்பதற்கான அர்த்தங்கள் விளங்கப் போவது இல்லை.
கிறுக்கப்பட்ட கோடுகளுக்கும், தெளிக்கப்பட வண்ணங்களுக்கும் நடுவில் ஏதோ ஒன்றை கண்டதை போன்ற பிரமை தோன்றும் போது, அதுவாக தானிருக்குமென்று ரசித்து விட்டு அடுத்த ஓவியத்திற்கு தாவுவதே புத்திசாலித்தனம். சில விஷயங்களை ஆழ்ந்து சிந்தித்து என்ன நடக்கிறதென்று அறிந்து கொள்வது அவசியமென்றாலும் கூட, எல்லா விஷயங்களையும் அவ்வாறே சிந்தித்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை என்பது என் கருத்து.
காரணம், எல்லாவற்றிக்கும் 'ஏன்..எதற்கு..' என்பதான கேள்விகளுக்கு அர்த்தத்தை கண்டறிய முயன்றோமென்றால் நாம் உண்மையிலேயே வாழ்கின்ற நேரத்தின் அளவு குறைந்து விடக் கூடும். எல்லாவற்றிக்கும் பொருள் தேடியலைந்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம். வாழ்க்கையில் அவ்வபோது தற்காலிகமாக வந்து போகக்கூடிய பல விஷயங்களை அதன் போக்கிலேயே ரசித்து வாழ்க்கையில் முன்னோக்கி நகர்வதே பல நேரங்களில் புத்திசாலித்தனம்.
பெரும்பாலான நேரங்களில் தொலைத்தது என்னவென்று தெரியாமலேயே நாம் தேடுதலில் இறங்கி விடுகிறோம். எந்த தைரியத்தில் அத்தகைய தேடுதல் வேட்டையில் நாம் இறங்குகிறோம் என்று தெரியவில்லை. அவ்வாறான தேடுதல்கள் எதை கண்டறிந்தாலும் திருப்தியளிக்கப் போவதில்லை. இன்னும் ஏதேனும் தட்டுப்படும் என்பதான எண்ணமே எப்போதும் தோன்றிக் கொண்டிருக்கும். தேடுதல்கள் எப்போதுமே ஒரு வரையறைக்குட்பட்டதாகவே இருக்க வேண்டும். எல்லையற்ற தேடல்கள் பெரும்பாலும் நம்மையே நாம் தொலைத்துவிடும் சுழலில் கொண்டு போய் விட்டுவிடக் கூடும்.
//ஒன்றுமே புரியவில்லையென்றாலும் கூட ஏதோ புரிவதாக நடித்து, ரசிப்பதாக காட்டிக் கொள்வதை போன்று தான் வாழ்க்கையை வாழ வேண்டியதாகி விடுகிறது.//
ReplyDeleteஎனக்கும் இந்த மாடர்ன் ஆர்ட் என்டிறானுன்களே அது ஒன்னும் புரியிறதில்லை .. :))