Thursday, September 19, 2013

செம்புலப் பெயனீர்..

குறுந்தொகை பாடல் 40: குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

- செம்புலப் பெயனீரார்.

உன் தாயும் என் தாயும் யார் யாரோ ?
என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர் ?
நானும் நீயும் எவ்வழியிலும் அறிந்திராவிடினும் 
செம்மண்ணில் பெய்த மழைநீர் போல 
அன்பு நெஞ்சங்கள் கலந்து விட்டனவே.

என்று காதலை எவ்வளவு அழகாக சங்க இலக்கியத்தில் பதித்திருக்கின்றனர். பள்ளியில் மனனம் மட்டுமே செய்த பாடல். அர்த்தத்தின் ஆழங்களை உணராத பருவம் அது. அல்லது உணர்த்தும் வகையில் கற்பிக்கப்படவில்லையோ என்னவோ. அடியில் சென்று முத்தெடுப்பதை விட மேலோட்டமாய் நீந்தி செல்லும் தூரங்களையும் எதிரலைகளையும் ரசித்து லயித்திருந்த பள்ளி பருவம் அது. இதை இப்போது படித்த போது எனக்கு மேலும் சில வரிகள் தோன்றின. செய்யுள் என்றாலே எனக்கு லேசாக பரதநாட்டியம் ஆடுமென்பதால் எளிய நடையில் எழுதுகிறேன்..

பிறகு 
நெடுங்கோடையொன்று வந்தது 
செம்மண்ணின்றும் மழைநீரைப் 
பெயர்த்தெடுத்துச் சென்றது 
நீரின் விட்டு சென்ற சுவடுகள் 
செம்மண்ணில் தங்கின நிரந்தரமாய் 

என்னவோ தெரியவில்லை. என் மனதில் தோன்றிய இவ்வரிகளை காகிதத்தில் துடைத்த போது தர்மபுரியின் "இளவரசன்-திவ்யா" மனதில் தோன்றி மறைந்தார்கள்.

-- பால் ஆரோக்கியம்

No comments:

Post a Comment