Friday, October 8, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (12)

தாம் விரும்பியவாறு எதுவும் நடப்பதில்லையென்றும், வாழ்க்கை எப்போதுமே ஒரு போர்க்களமாகவே இருப்பதாகவும் பலர் குறைபட்டு கொள்கின்றனர். தாம் அதிர்ஷ்டசாலியில்லை என்றும் வாழ்க்கையில் தமக்கான (போர்க்)களங்கள் அவைகளாக விதிப்படி அமைகின்றன என்பதுமான குற்றச்சாட்டை முன் வைக்கும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை, பல நேரங்களில் அக்களங்கள் நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டவை தான் என்பது.

நாம் மேற்கொண்ட முற்கால வினைகளின் ('வினை' அப்படினா 'செயல்'ன்னு அர்த்தங்க) மீது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருந்திருந்தோமேயானால் இக்கால நிகழ்வுகளின் போக்குகள் நாம் விரும்பும்படியாக அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பல நேரங்களில் இன்று நடக்கும் பல நிகழ்வுகள் கடந்த காலத்தில் நாம் செய்த செயல்களின் விளைவே..

இன்னும் சொல்லப் போனால், நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் சில முடிவுகள் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றத்தை (அல்லது) விளைவை கொண்டுவரும் என்பது தெரிந்தும் கூட பல நேரங்களில் நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. 'அப்படியெதுவும் நடக்காது' என்று நமக்கு நாமே பொய் சமாதானம் சொல்லிக் கொண்டோ அல்லது 'அத அப்ப பாத்துக்கலாம்' என்று விளைவை பற்றிய எண்ணங்களை புறக்கணித்தோ நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்கிறோம். விளைவையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் செய்ய இருக்கும் செயலை இன்னும் கொஞ்சம் திருத்தி செய்வதற்கோ அல்லது நம்மை நாமே அப்போதே திருத்திக் கொள்வதற்கோ நமக்கு பொறுமை இருப்பதில்லை.

"இவ்வழி கடினமாக இருக்கும்" என்று தெரியும் கணத்திலேயே பயணிக்கும் பாதையை மாற்றிக் கொள்ளும் முயற்சியையோ அல்லது அதே வழியில் வரவிருக்கும் கஷ்டங்களை கையாள்வதற்கான ஆயத்தங்களையோ செய்யாமல் அலட்சியத்தோடு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பயணத்தை தொடர்வதும் பின்பு கஷ்டம் வரும் போது சூழ்நிலையின் மீதும் வாழ்க்கையின் மீதும் குறைபட்டுக் கொள்வதும் அறிவின்மை என்பதை நாம் பெரும்பாலும் அறிவதேயில்லை..

அதற்காக விதி செய்யும் சதியின் வேலைகளை நான் முழுவதுமாக புறக்கணிக்கவில்லை. விதியின் காரணமாக நிகழ இருக்கும் சில நிகழ்வுகளை (எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் கூட) நாம் விரும்பிய பக்கம் திசை திருப்பிவிட்டிருக்க முடியும் சரியான நேரத்தில் சரியான அளவிலான மதியை நாம் வினைகளின் மீது காட்டியிருந்தால்..

பல நேரங்களில் விளைவுகளின் மீது மட்டுமே கோபம் கொள்கிறோம் நாம் வினையின் மேல் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே என்பதை அறியாமல் :-)

No comments:

Post a Comment