"மூட்டைப்பூச்சிய நசுக்குற மாதிரி நசுக்கிடுவேன்" என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையை சொல்கிறேன்.. மூட்டைப்பூச்சியை நசுக்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல.. அதுவும் சாரை சாரையாய் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் இருக்கைகளுக்குள் பதுங்கியிருந்து அமர்ந்தவுடன் பாய்ந்து தாக்கும் அவைகளிடம் இருந்து தப்பிப்பதென்பது கனவில் கூட நடக்காத காரியமே.. காரணம் தூங்கவே முடியாது.. அப்புறம் தானே கனவு காண்பதெல்லாம்!!
இருநூற்று ஐம்பது ரூபாய் மற்றும் அதற்கு மேல் கட்டணம் செலுத்தி வாங்கும் பயணச்சீட்டில் சின்னஞ்சிறு எழுத்துக்களில் கிறுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடிக் கொண்டு பார்த்தாலும் கூட "மூட்டைப்பூச்சிகள் ஜாக்கிரதை" என்பது எழுதாமல் எழுதப்பட்டிருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. உங்களுக்கே தெரியாது பயணச்சீட்டோடு சேர்த்து ஒரு இருக்கை நிறைய மூட்டைப்பூச்சிகளை இலவசமாக தருகிறார்கள் என்பதை.. ஏறி அமர்ந்தவுடன் தான் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்..
அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்யும் போது, சிவராத்திரிக்கு ஒத்திகை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மூட்டைப்பூச்சி கடியால் தடித்துக் கொள்ளும் சருமத்துடன் இரவு முழுவதும் விடாமல் சொறிந்துக் கொண்டே இருக்க வேண்டிய அவஸ்தையையும் தவறாமல் அனுபவிப்பீர்கள். பயணக்கட்டணம் என்று இவ்வளவு காசை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் இந்த அரசு பேருந்தின் இருக்கைகளில் பூச்சி மருந்தடிக்க கொஞ்சம் காசை ஒதுக்கினால் என்ன..? 'மருந்தடிக்க இன்னும் கொஞ்சம் கூடுதல் கட்டணம் கொடுங்கள்' என்று சொன்னால் கூட கொடுப்பதற்கு மக்கள் தயாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கட்டணங்களை உயர்த்துவதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, அதற்கு பெறுமானமுள்ள சேவைகளை வழங்க வேண்டுமென்பதான எண்ணம் ஏன் இவர்கள் மனதில் எழ மறுக்கிறது என்பது தெரியவில்லை..
பதவியிலிருக்கும் ஒரு அரசியல்வாதி எந்த ஊரிலாவது சாலையில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் நேரங்களில் அங்கிருக்கும் வேகத்தடைகளை அகற்றுவது மற்றும் சாலையின் குண்டுக் குழிகளை மூடுவது என்று எந்த குலுங்களும் இன்றி அவர்கள் வசதியாக பயணிக்க எல்லா கட்டளைகளையும் பிறப்பிக்கும் இவர்கள் பொதுமக்களுக்கு தேவையான சில தேவைகளைக் கூட ஏன் ஒழுங்காக வழங்க வேண்டும் என்று யோசிக்க மறுக்கின்றனர்...?
திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வரும் அனைத்து அரசு விரைவு பேருந்துகளிலும் பராமரிப்பு என்பதின் சுவடை காணவே முடியாது. இருக்கைகளின் மேல் மூடப்பட்டிருக்கும் துணி அழுக்கு கலந்து பழுப்பு நிறத்திலேயே தான் எப்போதும் இருக்கும். அதனுடைய உண்மையான நிறம் என்ன என்பதை உங்களால் கண்டறியவே முடியாது.. அவ்வளவு அழுக்கு அப்பி போய் இருக்கும். அதையும் பொறுத்துக் கொண்டு முகம் சுளித்தபடி அமர்ந்தால் இந்த மூட்டைச்பூச்சி தொல்லை அமர்ந்த ஐந்தாவது நிமிடத்திலேயே ஆரம்பித்து விடும். சொல்லப்படும் புகாரை நடத்துனர் கொஞ்சம் கூட கண்டு கொள்வதேயில்லை. "நான் என்ன சார் செய்யறது.." என்று எளிதாக கைவிரித்தபடி முன் சீட்டில் போய் உட்கார்ந்துக் கொள்கிறார். தமிழக அரசு பேருந்துகளில் இது என்னுடைய முதல் அனுபவமல்ல. இது தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது எப்போதும்.
அசுத்த குறைபாடோ மூட்டைப்பூச்சி தொல்லையோ இந்த அளவிற்கு பெங்களூரின் அரசு பேருந்துகளில் (கே.எஸ்.ஆர்.டீ.சி) பார்க்க முடியாது. அவர்களது பராமரிப்பு ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இது என்னுடைய அனுபவம். அங்கே சீட்டுகளில் பூச்சிகள் வாராதிருக்க மருந்தடித்திருப்பதை சில நேரங்களில் உங்களாலேயே வெளிப்படையாக உணர முடியும். கே.எஸ்.ஆர்.டீ.சி பேருந்துகளில் இந்த தொல்லைகள் இருப்பதேயில்லை. கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் கூட அதற்கு பெறுமானமுள்ள சேவையை அவர்கள் வழங்க தவறுவதில்லை. அடுத்த மாநிலம் வழங்க தயாராக இருக்கும் சரியான சேவையை நம்மவர்களுக்கு வழங்க நம் அரசு துறைகள் ஏன் தாயாராகயில்லை என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே..!!
No comments:
Post a Comment