சொல்லப்படும் கருத்துக்களை விட அவை சொல்லப்படும் விதம் தான் பெரும்பாலும் சர்ச்சைக்கு உரியதாகவும் பிரச்சனையை உண்டு பண்ணுவதாகவும் அமைந்து விடுகிறது. இதை எளிதாக விளக்க ஒரு சின்ன நகைச்சுவையான உதாரணம் சொல்கிறேன் (உதாரணம் என்னுடையதல்ல):
ஒரு பொண்ணுகிட்ட "கொஞ்சம் வாயை மூடு.." என்று சொல்வதற்கு பதிலாக, "உன் வாய் திறந்திருக்குறத விட மூடியிருக்குறப்ப நீ ரொம்ப அழகா இருக்க.." என்று சொல்வானாம் புத்திசாலி..
அதிலிருக்கும் நகைச்சுவையை ஒதுக்கி வைத்துவிட்டு சற்று ஆழ்ந்து கவனித்தீர்களேயானால் தெளிவாக புரியும், எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயமாக (sensitive matter) இருந்தாலும் கூட அதை முடிந்தவரை மற்றவர் மனது கஷ்டப்படாதவாறு சொல்லிவிட முடியும் என்பது.
பொதுவாகவே நாம் சொல்ல வருகிற கருத்தினுடைய நல்லவிதமான அர்த்தத்தை முன் நிறுத்தி வார்த்தைகளை கோர்ப்பதன் மூலம் அதை கேட்பவரது முகசுளிப்பை முடிந்தவரை தவிர்த்திட முடியும். நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லையென்றாலும் கூட முற்றிலுமாகவே முடியாத விஷயமல்ல இது.
பல நேரங்களில் சொல்லப்படும் வார்த்தைகளும் கருத்துக்களும் மற்றவர் முகத்தில் சுளிப்பை ஏற்படுத்துவதற்கு காரணம் 'விளக்கமின்மை' தான். 'அதை செய்யாதே' என்று மட்டுமே சொல்ல முன்வரும் நாம், 'எதற்காக அதை செய்யக்கூடாது?' என்பதான விளக்கத்தை கொடுப்பதேயில்லை. சில வாக்கியங்களோ கருத்துக்களோ ஒருவரை பார்த்து சொல்லப்படும் போது, "எதற்காக இப்படி சொல்கிறீர்கள்..?" என்று திரும்ப கேட்பவர்கள் மிகவும் குறைவு.
அவர்கள் விளக்கம் கேட்கவில்லையென்றாலும் கூட (முடிந்தவரை அவர்கள் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே) நமது கருத்துக்களை அதற்கான விளக்கங்களுடன் வெளிப்படுத்தும் போது அது ஆமோதிப்பை பெறுவற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாத மற்ற நேரங்களில் நல்லதொரு ஆரோக்கியமான கருத்துரையாடலை அது ஆரம்பித்து வைக்கலாம். சொல்ல போகும் கருத்தில் கவனமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் அவற்றை வெளிப்படுத்தும் விதத்திலும் உபயோகிக்கும் வார்த்தைகளிலும் கூட கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினோமென்றால் ஆரோக்கியமான சூழ்நிலைகளை பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment