Wednesday, October 20, 2010

சூன்யம் அப்பிய இரவொன்றில்..


Photo originally uploaded by teddypopit.
பசியின் காரணமாக வான் கடித்துண்ட மிச்சம் கொண்டு இருள் துளைக்க முயன்று தோற்றுப் போய் துவண்ட முகத்துடன் ஒடுங்கிய இலையாய் மேகங்களுக்குள் மறைந்தவாறே மெலிதாய் வெளிச்சம் கசிகிறாள் வானத்து நிலா.. நீர்த்துகள்களை தாங்கிய குளிர்ந்த காற்று தேகத்தில் மோதினாலும் கூட உள்ளுக்குள் இன்னும் வெக்கையின் தாக்கம்..

அமைதி ஆட்கொண்டுவிட்ட நடுநிசியில் எங்கோவொரு மூலையில் நிசப்தத்தை கொலை செய்தபடியே ஊளையிடும் நாய்க் கூட்டம் உள்ளுக்குள் இருக்கும் உயிரை நடுங்க செய்யாமலில்லை.. ஆனாலும் ஏதோவொரு தைரியத்தில் மொட்டை மாடியின் திறந்தவெளியில் தன்னந்தனியாய் நின்றபடியே ஆளரவமற்ற வீதியை வெறிக்கிறேன்..

சருகுகள் எங்கோ படபடக்கும் ஓசையும் சுவர்க்கோழிகளின் சன்னமான இரைச்சலும் இருளின் அமைதியை கிழித்துக் கொண்டிருக்க சூன்யம் அப்பிய அவ்விரவின் கருமை அடிமனதினது ஆழத்தில் ஒருவித பயத்தை மெலிதாக உண்டாக்குகிறது..

உள்ளுக்குள் சென்றுவிடலாமென்று திரும்ப எத்தனிக்கும் வேளையில் அறையினுள் அவள் விட்டுச் சென்ற சுவடுகள் யாவும் அவளில்லையென்பதை உமிழ்ந்தபடியே அடிமனதின் ஆழங்களை காயப்படுத்தும் அந்த ஞாபகங்கள் மீண்டும் கண்முன் அகோர தாண்டவமாடுகின்றன.. துளியும் தாங்க முடியா வலி தரும் அவ்வுணர்வுகள் எதிர்த்து தாக்க, அறைக்கு திரும்ப பயந்து இருளை மீண்டும் வெறிக்கிறேன்.. அதே சருகுகள் படபடக்கும் ஓசை.. சுவர்க்கோழிகளின் இரைச்சல்.. சூன்யத்தின் சுவடுகள்.. ஆனாலும் அவை சில கணங்களுக்கு முன்பு நெஞ்சுக்குள் ஏற்படுத்திய பயம் இப்போது சற்று குறைந்திருப்பதாக தோன்றுகிறது..

அறையின் சுவடுகள் கண்முன் நிறுத்தும் கடந்தகால நினைவுகளும் இரவை கவ்விக் கொண்டிருக்கும் சூன்யம் ஏற்படுத்தும் பீதியும் மாறிமாறி உள்ளத்தை நடுநடுங்க செய்ய, கிழக்கு வெறிக்கிறேன்.. வானமோ விடிந்தபாடில்லை..!!

No comments:

Post a Comment