Tuesday, October 19, 2010

மௌனமே கவியாக..!!

ஒவ்வொரு இரவின் மடியிலும் இமை மூடிய பொழுதுகளில் விரிந்திடும் கனவில் நாழிகை பிசகாது வலம் வருபவளே.. விடியலின் விளிம்பில் விழித்திடும் என் சிந்தையின் முதல் தேடலே.. என் நாசியின் தடத்தினில் தங்கிவிட்ட வாசமே.. வெறும் கூட்டிற்குள் செயற்கையாய் துடித்திருந்த இதயத்திற்குள் உயிரென்னும் காற்றை ஊதி சுவாசமாய் நிறைந்திட்டவளே.. என்னுயிரே..! எனதன்பே..!!

நுனிவிரல் சருமம் முதல் அடியணு ஆழம் வரை கரைந்திருக்கும் ஜீவனே.. உயிரற்ற சிந்தனைகள் கூட உயிர்பெற்றெழுவது உன்னை பற்றிய நினைவுகளின் போது மட்டுமே.. நீயில்லாத பொழுதுகளில் மனதிலிருக்கும் உன் பிம்பங்கள் உயிர் கொள்வதால் தனித்திருக்கும் வேளைகளில் கூட தனிமையொன்றும் தாக்குவதில்லை இப்போதெல்லாம்..

கணம் விடாது இன்பம் சேர்க்கும் என் வசந்தமே.. என் நினைவுகளின் பிம்பமாகவும் நிகழ்வுகளின் அங்கமாகவும் ஆனவளே.. இதழ் உதிர்க்கும் வார்த்தைகளில் உணர்ச்சிகள் ஒட்டிக் கொள்ளும் உயிர் சொல்லே.. என் அணுவின் நடுநிலையானவளே..! எனதான்மாவின் உயிர்நிலையே..!!

உடலின் பாதியாகி என்னுயிரின் மீதியாக எனக்கே எனக்காய் பிறந்த எனதுயிரே.. கருவறை தொட்டிலின் கதவு திறக்க அந்நியம் அப்பிய காற்று நுகர்ந்து, சன்னமாய் சற்றே அழுது, நிலம்தனில் நீ பாதம் பதித்த தருணங்களின் இப்பிம்பங்களை உன்னுடன் பகிர நான் பெற்ற வரம் எண்ணி உள்ளம் கொள்ளும் உவகையின் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை நான் தேடாமலில்லை.. மொழியின் ஆழத்தில் புதைந்திருக்கும் வார்த்தைகள் கூட என் அகத்தின் உணர்வுகளை துளிக் கூட வெளிப்படுத்தாத உணர்வே தோன்றுவதால், குறைபட்ட வார்த்தைகளை கையிலெடுக்க சித்தமின்றி மௌனத்தின் மொழி பேசி இதழ் விரித்து இன்பம் கசிகிறேன்..

ஏதேதோ சொல்ல முயன்று இதழ் துடித்து தோற்றுப் போகிறேன் உள்ளுக்குள்.. உன் விழி பேசும் மௌனத்தின் முன்பு வார்த்தைகளை உதிர்க்க நினைக்கும் என்னிதழ்கள் எப்போதுமே வலிமையிழந்து விடுகின்றன..

என் அமைதியின் சுவடுகளையும் அவை பேசும் மொழிகளையும் நீயறிவாய். அதனால் தான் உனக்கும் எனக்கும் மட்டுமே புரிவதான மௌனத்தின் மொழி பேசி மகிழ்ச்சி ததும்ப புன்னகையுடன் உன்னருகில் நெருங்கி அழகு கசியும் உன் பஞ்சு முகத்தை கையிலேந்தியபடியே மூச்சுக் காற்றின் வெப்பம் கலக்க இதழ்களோடு அன்பு பரிமாறி உன் கருவிழி நோக்குகிறேன்..

"பிறந்தநாள் வாழ்த்துக்கள்"..!!

No comments:

Post a Comment