Monday, October 25, 2010

சக மனித உயிர்க்கு குரல் கொடுப்போம்..

"நமக்கு எதுக்கு வம்பு..?" என்று போகும் குணம் நம்மில் பலருக்கு உண்டு.. நாம் பயணிக்கும் பாதைகளிலும், பொது இடங்களிலும், அக்கம் பக்கமென்று நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் மற்றவருக்கு நிகழும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டும் காணாமலும் போக தான் பெரும்பாலும் நாம் முயல்கிறோம்.

அதே கொடுமைகளும் அநீதிகளும் நமக்கு இழைக்கப்படும் போது நமக்கு துணையாக தோள் கொடுத்து அவற்றை எதிர்த்து போராட யாரும் முன்வருகிறார்களா என்று சுற்றிலும் தேடும் நம் விழிகள் அவை மற்றவர்களுக்கு இழைக்கப்படும் போது வேறுதிசை பார்ப்பதாக பாவனை செய்து அவ்விடம் விட்டு நகரவே முயல்கின்றன..

உடலளவிலும் மனதளவிலும் பலவீனமானவர்களுக்கு கொடுமைகள் நடக்கும் போதும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போதும் நாமாகவே முன்வந்து அவர்களுக்கு ஆதரவு தருவதும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். அதை உதவியாக மட்டுமே நினைத்து, "உதவி செய்ய எனக்கு இப்ப மூடு இல்லை" என்பதை போன்று அங்கிருந்து நகர்வது சரியான செயலன்று. காரணம் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அதே சூழ்நிலையில் இருப்பார்களேயானால் நாம் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் அங்கிருந்து நகர்வோமா..?

"அவர்கள் என்ன எனக்கு நெருக்கமானவர்களா..?" என்று கேள்வி எழுப்புவீர்களேயானால் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒருநாள் நீங்கள் இல்லாத வேளையில் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதே கொடுமைகள் நிகழும் போது அங்கு சுற்றியிருக்கும் மனிதர்களும் அதே போன்று நினைத்து அவர்களுக்கு கை கொடுக்க முன்வராமல் போகலாம்..

பிறருக்கு நடக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டும் காணாமலும் போகாமல் எதற்காக நாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதை விளக்க கூடிய சிறுகதையொன்றை சில நாட்களுக்கு முன்பு படித்தேன்.. ஆழமான கருத்து பொதிந்த அக்கதை இதோ..

தனது நாற்பதுகளில் இருக்கும் ஒருவன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மங்கிய வெளிச்சத்துடன் வெறிச்சோடிய சாலையொன்றை அவன் கடக்கும் வேளையில் சாலையை ஒட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியிலிருந்து ஒரு பெண் அலறும் சப்தம் மெலிதாக கேட்கிறது..

சில வினாடிகள் யோசனைக்கு பின், வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு அலறல் வரும் திசை நோக்கி செல்கிறான்.. அங்கே ஒரு பெரிய மரத்திற்கு பின்புறம் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறான். அப்பெண்ணை காப்பாற்ற முயலும் வேளையில் அவன் கையில் ஆயுதம் ஏதாவது இருந்து தன்னை தாக்கிவிட்டால் என்ன செய்வதென்று சில வினாடிகள் அவன் யோசிக்கிறான். தன்னை பலாத்காரம் செய்பவனது பிடியிலிருந்து வெளிவர முடியாமல் திமிறிக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் கை கால்கள் மரத்தை தாண்டி வெளியில் தெரிய, என்ன ஆனாலும் பரவாயில்லையென்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹே.. அவள விடுறியா இல்லையா..?", என்று சப்தமெழுப்பியவாறே கீழே கட்டை எதுவும் கிடக்கிறாதாவென்று பார்த்துக் கொண்டே தட்டுப்படும் சில கற்களை பொறுக்கிக் கொண்டு வேகமாக அம்மரத்தை நோக்கி போகிறான்.

அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுக் கொண்டிருப்பவன் சப்தமிட்டபடியே தன்னை நோக்கி வரும் இவனைப் பார்த்ததும் அவளை விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடி விடுகிறான். மரத்தை நெருங்கும் அவன், "பயப்படாதம்மா.. அவன் போய்ட்டான்.. நீ தைரியமா வெளிய வா.." என்று சொல்ல, "அப்பா நீங்களாப்பா.." என்றபடியே மரத்திற்கு பின்புறமிருந்து வெளிப்படுகிறாள் அப்பெண். அப்போது தான் அவனுக்கு தெரிகிறது அது அவன் மகளென்று.. அழுதபடியே வேகமாக ஓடிவந்து தன் தந்தையை கட்டிப் பிடிக்கிறாள் அப்பெண்..


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. எனக்கென்னவென்று அப்பெண்ணை காப்பாற்ற முயலாமல் அவன் அங்கிருந்து போய் இருந்தால் என்னவாகியிருக்கும் என்று.. கொடுமைக்கும் அநீதிக்கும் உள்ளாகியிருப்பவர் யாரோ என்பதான அலட்சியப்போக்கு கொள்வதை இனியாவது தவிர்ப்போமே.. உடலளவிலும் மனதளவிலும் பலவீனமான சக மனித உயிர்க்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களை மீட்பதும் அவர்களுக்கு துணையாக குரல் கொடுப்பதும் மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொள்வோம்..

No comments:

Post a Comment