Saturday, July 19, 2014

[ கவிதை ] பிறந்த நாள் வாழ்த்துக்கள், என் அன்பே!

அவனெழுதிய எழுத்துக்களுக்கு 
நாம் உயிர் கொடுத்த அத்தருணம் 
எதுவென்று அறிய விரும்பி
நீயாகிய நான் 
பின்னோக்கி நடக்க
நானாகிய நீ 
என் மீது இடிக்க 
தேடல் மறந்து 
கூடலில் நாம் திளைக்க 
மீண்டும் உயிர் கொடுக்கிறோம் 
அவனெழுதிய 
மற்ற சில எழுத்துக்களுக்கு..

என்அன்பே..
இரும்புருக்கும் தீ ஜூவாலையாய்
நெஞ்சுக்குள் பரவும் 
உன் காதலில் 
உருகி வழியும் என்னிதயத்தில் 
உன் பெயர் 
உன் உருவம் 
உன் வாசனை..

கரம் பிடித்து 
என்னுடன் வா
என்னுயிரே !

மனிதர் இல்லாததொரு உலகத்திற்கு
நானுன்னை அழைத்து செல்கிறேன்..
காலம் வெல்லும் 
காதல் கதையொன்றை 
நாமங்கே எழுதுவோம்..
நம் காதல் பிரசவிக்கும் 
நமதன்பு செல்வங்கள் 
அவ்வுலகை ஆளட்டும்..
அங்கே
நம் காதல் 
அதன் சுவடுகள் 
மட்டுமே நிறைந்து கிடக்கட்டும்..

தேகத்தின் 
நுண்ணிய துளைகளில் நுழைந்து 
உதிரத்தில் கலந்து 
இதயத்தை நனைத்து 
மனதிற்குள் படர்ந்து 
மேகங்களுடன் சிநேகிக்கும் வாய்ப்பளித்த
என் காதலே,

இந்த நாள் 
இனிதாக அமையட்டும் !!
இந்த வருடம் 
மகிழ்வில் பொங்கட்டும் !!
உனதிந்த வாழ்வு 
இணையற்ற இன்பத்தில் திளைக்கட்டும் !!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!!

பால் ஆரோக்கியம்.
19-ஜூலை-2014.

No comments:

Post a Comment