Saturday, July 26, 2014

[ கவிதை ] கடற்கரையில் நாம்..

மல்லாந்து விரிந்திருக்கும் 
வெண் மணற்பரப்பின்
;உலர்ந்த மேனியில் 
அமிழ்ந்து எழும் 
நம் பாதங்கள் 
காதலின் சுவடுகளை 
கடற்கரையில் பதிவிடுகின்றன 

சீறிவரும் கடலின் 
தேகம் தொட்டு வரும் 
சில்லென்ற காற்று 
நம்மை தழுவி செல்ல 
இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் 
நம் விரல்கள் நழுவிப் பிரியாதபடி

வெளிச்சத்தை இரவு 
விழுங்க தொடங்கியிருக்க 
உன் புன்னகைகளை 
வெட்கம் முழுவதுமாக விழுங்கியிருக்கிறது 

வானம் தன்னை 
அலங்கரிக்க தயாராகிறது 
நானுன் கூந்தலை 
மலர்களால் அலங்கரிக்கிறேன் 
உன் வெட்கத்தில் 
நனைந்தெழும் அம்மலர்களின் வாசனை 
போதையைத் தருகிறது

இவ்வளவு 
கிறக்கத்தை ஏற்படுத்தக் கூடியதா 
இந்த காதல்..
நம் காதல் !

அன்பே !
இதே கடற்கரைக்கு
நாளையும் நாம் வருவோம்..
காதலின் மணம் பரப்புவோம்..
நாம் வந்து கொண்டே இருப்போம் 
கடலின் மேனி 
வெட்கத்தில் சிவக்கும் வரை !!

பால் ஆரோக்கியம்.
26-ஜூலை-2014.

No comments:

Post a Comment