Thursday, January 29, 2015

ஒரு கிறுக்கனின் நேர்ப்பார்வை [1]

கிறுக்கனின் மொழி தொடர்பிழந்து தொடரும் ஒன்று.​

அவன் எதற்கும் அர்த்தங்களைத் தேடுவதில்லை. அர்த்தங்களைக் கொடுக்கிறான்.

ஒன்றின் இல்லாமை ஏதோ ஒன்றின் பொருட்டே நிகழ்வதாக அவன் நம்புகிறான்.

அவன் எல்லாரையும் எல்லாவற்றையும் கட்டி அணைத்துக் கொள்கிறான். வேறுபாடுகளை அவன் சுவையின் வெவ்வேறு பரிமாணங்களாக பாவிக்கிறான். சுவைக்கு வெவ்வேறு பரிமாணங்கள் இன்றியமையாதது என்பதை அவன் அறிந்து இருக்கிறான். கசப்பை பருகும் போதும், இனிப்பை சுவைக்கும் போதும், காரத்தின் விளைவுகளை விழிகளில் ஏந்தும் போதும் உள்ளுக்குள் ஏற்படும் உணர்வுகளை அவன் ரசிக்கிறான். அந்த ரசனையின் முடிவில் ஏதோ ஒன்றின் நிறைவு அவனைத் தழுவிக் கொள்கிறது. அப்போது அவன் லேசாக உணர்கிறான். வானில் பறக்கிறான்.

----

சித்திரம் பேசுதடி 
----------------------------
சித்திரங்கள் 
பேசுவதில்லை 

அவை 
பேச்சை நிறுத்தி விடுகின்றன 

பிறகு
மௌனத்தின் 
அழகு பற்றி 
மெளனமாக எடுத்து கூறுகின்றன 

அசையாமல் 
இருக்க வேண்டிய  கணங்கள் 
கடினமற்றதாகவும் 
மிகவும் ரசிக்கப்படவும் 
கடந்த காலத்தின் 
கடின உழைப்பு 
எவ்வளவு தேவையென்று 
காற்றின் சப்தத்தில் 
கவிதைகள் எழுதி 
நம் செவிகளை நோக்கி 
கை குவித்து ஊதுகின்றன 

 நகர்ந்து தன்னிடம் வரும் மனிதரை 
 புன்னகையுடன் வரவேற்று 
தன்னை விட்டு விலகி நகர்பவர்க்கு 
அப்புன்னகை மாறாமல் விடையனுப்பி 
அடியெடுத்து நகர நகர 
அடுத்தடுத்த பிரமிப்பு உண்டென்று 
சொல்லாமல் சொல்லும் அவை 
சொல்லி முடிக்கின்றன 
நாம் வரையும் இச்சித்திரம் 
எவ்வாறு வரையப்பட வேண்டுமென்று

[கிறுக்கல் தொடரும்]

--
பால் ஆரோக்கியம்

No comments:

Post a Comment