மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Wednesday, December 30, 2009
இந்த கொடுமைய யார்ட போய் சொல்றது..
இப்ப கொஞ்ச மாசமா என் தலைய கதிர் அறுத்து அழகாக்குறது அந்த பதினஞ்சு வயசு பய தான். பாக்க நண்டு மாதிரி இருந்தாலும், தொழில்ல ஜித்தன்னு சொல்லலாம். நா எப்டி வெட்டுன்னு சொல்றேனோ அதே மாதிரி வெட்டி விடுவான்.
ஆனா அன்னிக்குனு பாத்து, அந்த பய இன்னொருத்தன் தலைய மேஞ்சுகிட்டு இருந்தான். கடையோட ஓனர் கொஞ்சம் பெரிய ஆள் தான். அன்னிக்கு அவர் கை பற பறன்னு இருந்திருக்கும் போல.. 'வாங்க சார்.. இங்க வந்து உட்காருங்க..'னு அவர் பக்கத்திலே இருந்த சேர்-ஐ காமிச்சாரு.
"சரி.. இந்த ஆபிசர் நல்லா எக்ஸ்பீரியென்ஸ்டு மாதிரி தெரியுது. வாண்டே நல்லா வெட்டினா தல எப்டி வெட்டி விடும்"னு நம்ம்ம்ம்ம்பி (அந்த 'ம்'-அ கொஞ்சம் அழுத்தி மெல்லமா படிங்க.. அதுக்காக தான் அத்தன 'ம்ம்ம்ம்' போட்டிருக்கேன்) போய் உட்காந்தேன்.
மெல்லமா தண்ணிய தெளிச்சு, ஒரு சின்ன மசாஜோட ஆரம்பிச்சாரு. ஆரம்பம் நல்லா இருக்கவும், கொஞ்சம் கண்ணசந்துட்டேங்க. அது தப்பா.. அப்டியே தப்புனாலும் என் தலைல ரெண்டு தட்டு தட்டி எழுப்பி விட்டுருகலாம்ல அந்தாளு. அத விட்டுட்டு தலைய இப்படியா கொதறி வெப்பாரு..
ஏதோ பத்து மாசம் சாப்பிடாம பசில இருந்த மாடு, வயல்ல இருக்குற புல்லெல்லாத்தையும் மேஞ்சிட்டு, "இன்னும் பசிக்குது.. ம்ம்ம்மே.."னு கத்துற மாதிரி, தலைல இருந்த முடி எல்லாத்தையும் ஓட்ட வெட்டிட்டு, "என்னங்க உங்கள்ட முடி அவ்ளோ தானா..?"னு கேக்குற மாதிரி கத்தரிக்கோல என் மூஞ்சி முன்னாடி ஆட்டினப்போ தான் கண்ண தொறந்தேன்.. சினிமால வடிவேலு சொல்ற மாதிரி, "நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.."
"ஏண்டா டேய்.. முடி தானடா வெட்ட சொன்னேன் உன்ன.. மொட்டையா அடிக்க சொன்னேன்.. ஆரம்பிசப்ப நல்லா தானடா ஆரம்பிச்ச.. ஏன் இந்த கொல வெறி.. 'ஐயா எனக்கு நெறைய முடி வெட்டனும்னு ஆசையா இருக்கு'னு சொல்லிருந்தினா, பக்கத்துக்கு வீட்ல கட்டிப் போட்ருக்க செம்மறி ஆட்ட கொண்டு வந்து விட்டுருப்பேன்ல.. என் தல தான் உனக்கு கெடச்சதா.. போடாங்ங்ங்ங்க.."னு அந்தாளு மூஞ்சில ஓங்கி ஒரு குத்து விடனும் போல இருந்துச்சு..
"இன்னும் ஏன்டா கத்திய மூஞ்சி முன்னாடி ஆட்டிட்டு இருக்க. முடிய மொட்டயடிச்சது பத்தாதா? என் மூக்கையும் வெட்டனுமா? கத்திய அந்த பக்கம் எடுடா.."னு அந்தாள தள்ளிட்டு எந்திரிச்சு, "ஐயோ.. இருந்த நாலு முடியையும் நாலு இன்ச் கூட இல்லாம வெட்டிடானே"னு வயிதெரிச்சலோட, "இந்தா புடி காசு.. தூக்க மாத்திரைய வாங்கி போட்டுகிட்டு நல்லா போய் தூங்கு.. இப்டி மத்தவங்க தலையோட வெளாடாத.."னு அவன சபிசிட்டே வெளிய வந்தேன்..
அடுத்த நாள் ஆபீஸ் போனப்ப, மத்தவங்க எத கேக்க கூடாதுன்னு நெனச்சேனோ அத என் கூட வொர்க் பண்ற என் ப்ரண்ட் என்னை பாத்ததும் சிரிசிட்டே கேட்டா, "என்ன பால்.. உரிச்ச கோழியா வந்து நிக்குற.."
"சிங்கத்த உரு தெரியாம செதசிட்டதால, உனக்கு சிரிக்க தைரியம் வந்துடுச்சுல.."னு ஆதங்கத்தோட, "இனிமே முடி வெட்ட போறப்ப தூங்குவியா.. தூங்குவியா.. தூங்குவியா.."னு என்ன பாத்து நானே கேட்டுகிட்டேன்..
"சரி விடுடா பால்.. முடி தான.. இன்னும் ஒரு மாசத்திலே வளந்திட போகுது.. இதுக்கு ஏன் கவலை பட்டுகிட்டு.."னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்டாலும் உள்ளுக்குள்ள, "இருந்தாலும் உன் தலைல வெளயாடிட்டானே அந்த எரும.."னு ஒரு கோபம் இருந்திட்டு தான் இருக்கு..
Tuesday, December 29, 2009
மாற்றம் விரும்பப்படும் கணங்கள்..
பெரும்பாலும் சௌகர்ய எல்லையிலிருந்து (ஆங்கிலத்தில் அதை கம்பர்ட் ஜோன் [confort zone] என்று சொல்வார்கள், எனக்கு தெரிந்த முறையில் அதை தமிழ்ப்படுத்தி உள்ளேன்) வெளிவருவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அதனால் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதென்பது கடினமாக உள்ளது. எனவே தான் பழகியவர்களையும் பழகிய இடங்களையும் விட்டு பிரிவதற்கு மனம் ஒத்துக் கொள்வதில்லை.
என்ன தான் மனம் இப்படி சிந்தித்தாலும், வாழ்வின் நிகழ்வுகள் நாம் விரும்பியவாறு அமையாத கணங்களிலும், மனதை அடியாழம் வரை காயப்படுத்தும் வகையிலான சில விஷயங்கள் நடக்கும் போதும், நம்பி இருந்த உறவுகளாலும் நட்புகளாலும் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்திக்கும் கணங்களிலும், இருக்கும் எல்லாவற்றையும் முற்றிலுமாக துறந்து, இதுவரை நடந்தவைகளின் காலடி சுவடுகளே பாடாத ஒரு புது உலகத்தில், புதிய மனிதர்களுடன், முதன்முறையாய் பூமியை முத்தமிடும் குழந்தையின் மனநிலைக்கு மீண்டும் சென்று, முற்றிலுமாக புதியதொரு வாழ்க்கையை மீண்டும் தொடக்கத்திலிருந்து [ஆனால் இம்முறை மிகுந்த கவனமுடன் யாரை சேர்த்துக் கொள்வது, யாருடன் பழகுவது, எப்படி வாழ்வது என்று சற்று எச்சரிக்கையுடன்] வாழ ஆசை கொண்டதும் உண்டு..
மாற்றமென்பது ஏற்றுக் கொள்ள இயலாததாக இருப்பினும், ஏமாற்றங்களாலும் துரோகங்களாலும் கீறல்பட்ட இதயங்கள், அதனால் ஏற்படும் வலிகளுக்கு மாற்றங்கள் எவ்வளவோ மேல் என்றே எண்ணுகின்றன. அத்தகைய சிந்தனைகள் பல நேரங்களில் எனக்குள்ளும் எழுந்ததுண்டு.. சந்தித்து பழகிய மனிதர்கள் செய்யும் துரோகங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மன வருத்தங்கள் இவற்றை விட சந்தித்திராத மனிதர்களும் அங்கே நிலவும் ஒரு அந்நிய உணர்வும் எவ்வளவோ மேலானவை என்பது தான் அத்தகைய எண்ணங்களுக்கு காரணம்.
அது ஒரு வகையில் உண்மையும் கூட. நன்றாக பழகிய சில உறவுகளால் இழைக்கப்படும் துரோகங்களும், அதனால் வரும் ஏமாற்றங்களும் மனதினுள் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களை ஞாபகப்படுத்தும் சுவடுகள் அந்த காயங்களை மீண்டும் மீண்டும் கீறி ஆறாத ரணத்தையும் ஏற்படுத்துகின்றன. 'இவனா/இவளா இப்படி நடந்து கொண்டான்(ள்)..' என்று மனதினுள் ஏற்படும் ஆதங்கத்தையும், அதனால் தோன்றும் ஏமாற்றம் கலந்த வலியையும் மனிதனால் ஏற்று கொள்ள முடிவதில்லை.. அத்தகைய மனிதர்களை ஏன் சந்தித்தோம் என்றும், அவர்கள் மேல் ஏன் நம்பிக்கை கொண்டோமென்றும், அவர்களை ஏன் சார்ந்திருந்தோம் என்பதுமான கேள்விகள் மனதில் இடைவிடாமல் தோன்றி தீராத வேதனையை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றன.
எனவே தான் அத்தகைய நேரங்களில், மாற்றமென்பதை நமது மனம் தானாக தேடி அலைகின்றது. முழுமையான ஒரு மாற்றத்தை ஏங்கி எதிர்பார்க்கின்றது. அத்தகைய கணங்களில் மாற்றமென்பது விரும்பப்படுகின்றது. அதுவும், கடந்த கால சுவடுகளை முற்றிலுமாக அழித்து, நடந்தவைகளை மறக்க செய்யும் மாற்றமொன்று அமைந்தால் அதை விட அக்கணங்களில் வேறென்ன வேண்டும்..
Friday, December 25, 2009
அழகுடன் மிளிரும் குளிர்காலம்..
குடும்பத்தினருடன் நிமிடங்களை செலவிட உதவும் விடுமுறை நாட்கள்.. எந்தவித கேள்விகளுமின்றி தானாக மனதிற்குள் நுழைந்து கொள்ளும் குதூகலம்.. உற்சாகம்.. ஏழைகளும் இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என்று பெருந்தன்மை காட்டும் இயற்கை.. உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரும், நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியும் சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் குளிர்காலம்..
"என்ன தான் சாதித்திருக்கிறோம் இந்த வருடம்..?", என்றொரு சிந்தனையில் என்னை ஆழ்த்தும் நாட்கள் இவை.. வழக்கம் போல பெரிதாக எதையும் சாதிக்கவில்லையென்றாலும், குறைபட்டு அலுத்து கொள்ளுமளவிற்கு முற்றிலும் சோம்பேறியாகவும் இருந்துவிடவில்லை..
சில நல்ல செய்திகள், மகிழ்ச்சி ஏற்படுத்தும் புதிய உறவுகள், சில நண்பர்களின் விடைபெறல்கள், புதிய சில நட்புகளுக்கான அழைப்பிதழ்கள், திடீரென்ற இன்ப அதிர்வுகள், அங்காங்கே சில ஏமாற்றங்கள், தந்தையை போன்று பழகிய மனிதரின் ஈடு செய்ய முடியாத இழப்பு, பொதுவாகவே மனதை வேதனைபடுத்திய நிகழ்வுகள், ஆனந்த கண்ணீரை வரவழைத்த சில கணங்கள், முதுகு தட்டி உற்சாகம் ஏற்படுத்திய சில பாராட்டுகள், சொல்ல தெரியாத காரணங்களுக்காக மனதை பாதித்த சில காட்சிகள்.. மகிழ்ச்சி, வேதனை, சந்தோசம், பிரிவு, வருத்தம், உற்சாகம், குதூகலம், ஏமாற்றம், அழுகை, ஆனந்த கண்ணீர் இப்படி எல்லாம் கலந்த கலவையாகவே அமைந்திருந்தது இந்த வருடம்..
வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் இத்தகைய தருணங்கள் எப்போதும் எனக்கு கற்று கொடுக்கும் பாடமென்னவென்றால், வாழ்வின் ஏற்றங்களை எவ்வாறு மகிழ்வுடன் ஏற்று கொள்கிறோமோ, அதே போல வாழ்வின் கடினமான கணங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு முன்னோக்கி நகர வேண்டுமென்பது தான். ஏற்ற இறக்கங்கள் கலந்தது தானே வாழ்க்கை.
வாழ்வில் மகிழ்ச்சியான நிமிடங்களையும் வெற்றிகரமான நிகழ்வுகளையும் சந்தோசமாக வரவேற்கும் மனிதன், சோகமொன்று வந்துவிட்டால் "இது ஏன் எனக்கு வருகிற"தென்று நொந்து கொள்கிறான்.. நல்ல விஷயங்கள் நடக்கும் போது, "இது ஏன் எனக்கு நடக்கின்றது.." என்று அவனுக்கு கேட்க தோன்றுவதில்லை. தீயவை நடக்கும் போது தான் அத்தகைய கேள்விகள் அவனுள் எழுகின்றன.
ஏற்றங்களை எவ்வளவு மகிழ்வுடன் ஏற்று கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் இறக்கங்களை மகிழ்வுடன் ஏற்று கொள்ள இயலாது என்றாலும், முடிந்தவரை அவற்றை எளிதாக எடுத்து கொள்ளவும், மனம் பெரிய அளவில் அவற்றால் பாதிக்கப்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இறக்கங்கள் என்றும் வீழ்ச்சியாகவே இருந்து விடப் போவதில்லை.. வாழ்வின் ஏற்ற இறக்கங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுவிட்டால் அதை விட வேறென்ன வேண்டும் மனிதனுக்கு.
நமக்கான வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதற்கான முயற்சிகளை முடிந்தவரை எடுப்போம். ஆனால் அதே சமயத்தில், சில சூழ்நிலைகளால் ஏற்படும் கால தாமதங்களையும், சிற்சில ஏமாற்றங்களையும், வாழ்வின் ஏற்ற தாழ்வுகளையும், கடலின் அலைகளை ரசிப்பது போன்று எளிதாக எடுத்து கொண்டு தொடர்ந்து பயணிப்போம்.. வாழ்வின் இருண்ட பக்கங்களில் பயணிக்க நேரும் தருணங்களில், "என் வாழ்க்கை அவ்வளவு தான்.." என்று நீங்களே உங்களுக்கு முடிவுரைகளை எழுதிக் கொள்ளாதீர்கள். சில நேரங்களில் வாழ்க்கையை அதன் போக்கிலும் விட்டு கொடுங்கள்.. எதிர்பார்த்த காரியம் சில நேரங்களில் நிகழாமல் போனாலும், வாழ்க்கை உங்களுகென்று சுவாரசியமான, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிய சில விசயங்களை வைத்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அது உண்மையும் கூட.. எனவே தைரியமாக முன்னோக்கி நகருங்கள்.. வாழ்கையை வாழ்ந்து பாருங்கள்.. சில நேரங்களில் உங்கள் விருப்பப்படியும், சில நேரங்களில் அதன் போக்கிலும்..
எல்லோருக்கும் பண்டிகை கால நல்வாழ்த்துக்கள்.. :-)
Wednesday, December 23, 2009
உரையாடி உறவாட சில நிமிடங்கள்..
Saturday, December 19, 2009
இன்னும் சில சிந்தனைகள்..
'அவன்/அவள் அப்படி தான்..' என்று மனதை என்ன தான் தயார்படுத்தி வைத்திருந்தாலும் வாக்குவாதங்களையும், கருத்து வேறுபாடுகளையும் கையாளுதல் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. சிறிய சண்டைகள் உறவுகளை இன்னும் நெருக்கமாக்கும் என்றாலும், சில நேரங்களில் பெரிய அளவிலான மன வருத்தங்களை ஏற்படுத்தும் சில சண்டைகளும் வேறுபட்ட கருத்து பற்றிய வாக்குவாதங்களும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
அனல் பறக்கும் வார்த்தைகள் வெளிவர தொடங்கும் கணங்களிலும், மனதின் உணர்ச்சிகள் வேகமாக கோபம் கொள்ள தொடங்கும் கணங்களிலும் முடிந்த வரை பொறுமை காத்து, வார்த்தைகளை வெளியிடாமல், மௌனம் கொண்டு, மனதை சாந்தப்படுத்தி, அதே நிகழ்வை வேறொரு கோணத்தில் இருந்து அசைப்போட்டு, அப்படியும் அது மனதை திருப்திப்படுத்தாத கணங்களில் தான் மனதில் பட்டதை பேசும் பழக்கம் எனக்கிருந்தாலும், சில நேரங்களில் அவ்வாறான பொறுமை கலந்த பண்பு கை நழுவிப் போய்விடுகின்றது. 'நான் சரி.. நீ தவறு..' என்னும் எண்ணம் மேலோங்கி விடுகின்றது. அத்தகைய எண்ணத்தின் அடிப்படையிலான சிந்தனைகளே பெரும்பாலான நேரங்களில் கருத்து வேறுபாடுகளினால் ஏற்பட்ட இடைவெளியை அதிகமாக்குகின்றன.
தன் மேல் தவறில்லையென்றாலும் சிலர் நடந்தவைகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு காரணம் இது தான். அதே சமயத்தில் இதை வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, உங்களிடம் நெருக்கமாக பழகும் மனிதர்கள் சில நேரங்களில் சண்டையின் போது சட்டென்று வருத்தம் தெரிவிப்பதால் உடனே நீங்கள் செய்தது சரியென்று ஆகி விடாது என்பதையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.. உறவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்க ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் என்பது மிகவும் அவசியமாகி விடுகின்றது. அவ்வாறு விட்டுக் கொடுத்தல் என்பது பொருளளவில் மட்டுமல்ல உணர்வளவிலும் கருத்துகளிலும் தான்.
Saturday, December 12, 2009
இரு பறவைகள்! ஒரு காதல்!!
அழகான கவிதையொன்று
எழுதி நெடுநாளாகி விட்டதென்று
மனதினுள் சிந்தனை கொண்டு,
எண்ணங்கள் நிலைத்திருக்க
கண்கள் வான் வெறித்திருக்க
முற்றத்தில் அமர்ந்திருந்தேன்..
சட்டென்று சலனம் கேட்டு
மெதுவாய் திரும்பி பார்க்கையிலே,
ஆங்கே கிளிகள் இரண்டு
மாமரத்தின் கிளைகளிலே
பார்வைக்கெட்டும் தூரத்திலே
கொஞ்சி காதல் பரிமாறும்
காட்சியொன்று கண்முன் கண்டேன்..
உள்ளுக்குள் உவகை கொண்டேன்..
கொஞ்சி குலாவிய படி
மாம்பழமொன்றை மெதுவாய் கொத்தி
அவைகளுக்குள் பகிர்ந்துண்ணும் அழகில்
மெல்ல என் இதயம் இழந்தேன்..
இனம் புரியா ஆனந்தம் கொண்டேன்..
மெதுவாய் சில முத்தங்கள்..
அருகாமையின் தீண்டல்கள்..
அன்பின் பரிமாறல்கள்..
இவைகளைக் கண்டபோது
நானுமொரு பறவையாய்
பிறந்திருக்கலாமே என்று
உள்ளுக்குள் ஓர் ஆசை கொண்டேன்..
கண்களில் நீர்த்துளிகள் பெற்றேன்..
தலைக்கு மேல் சற்று தொலைவில்
நெஞ்சம் தொட்ட காதலையும்
நானும் அவளும் அருகருகில்
இந்நேரம் இருந்திருப்போமே..
ஆனந்தம் கொண்டிருப்போமே..
சின்னதாய் சில இறக்கைகள்
இல்லாததன் காரணமாய்
பூமியில் நடக்கும் சாபம் பெற்றோம்..
மடத்தனமான மானிட கொள்கைகளுக்கு
நாங்களும் இரையாகிப் போனோம்..
பறவைகளாய் இனம் மாற
விலையொன்று உண்டென்றால்
எப்பாடு பட்டாகிலும்
அவ்வரம் பெற்றே தீர்வேன்..
அப்போதாவது நாங்களிருவரும்
அருகருகே இருக்கவியலுமே!!
Friday, December 11, 2009
நீர்க்குமிழிகள்...
என்ன தான் மறக்க முயன்றாலும், சில எண்ணங்கள் மீண்டும் மீண்டும் இடைவிடாது கரை சீண்டும் அலைகளைப் போன்று மனதை அரித்த வண்ணமே உள்ளன. மறக்க தான் முடியவில்லை, மறைத்தாவது வைக்கலாமென்றால் அதுவும் முடிவதில்லை. ஞாபக செல்களில், சில நிகழ்வுகளும் அவை சார்ந்த நினைவுகளும் கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்களைப் போன்று அழுத்தமாக பதிந்து விடுகின்றன.
மனதினுள் வலி ஏற்படுத்தும் அத்தகைய ஞாபகங்களை அகற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள், தெரியாமல் மை குப்பியை சாய்த்து உடல் முழுதும் ஊற்றி, பின் குற்ற உணர்ச்சி கொண்டு அதனை உடம்பிலிருந்து அழிக்க முயன்று தோற்றுப் போன மனநிலையுடன், என்ன செய்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழிக்கும் சிறு குழந்தையின் நிலைக்கு தான் மனிதனை எப்போதும் எடுத்து செல்கின்றன .
'ஏன் அவளை/அவனை சந்தித்தேன்.. ஏன் அந்த செயலை செய்தேன்.. நான் ஏன் அங்கே சென்றேன்.. எதற்காக அந்த இடத்தில் நான் வாய் திறந்தேன். நானெப்படி அது நிகழ்வதற்கு என் வாழ்வில் இடம் கொடுத்தேன்..' இன்னும் எத்தனையோ கேள்விகள் பலரது உள்ளத்தில் எப்போதும் நீர்க்குமிழிகளைப் போன்று மேலெழுந்து வெடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. மனித வாழ்க்கையை பின்னோக்கி இயக்கி (playback), மீண்டும் வாழும் வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனையோ முறை நான் நினைத்ததுண்டு. அப்படியொரு வாய்ப்பிருந்தால், பல செயல்களை திருத்தி செய்யவும், நெஞ்சை சுடும் சில நிகழ்வுகளை தவிர்த்திருக்கவும், வலி ஏற்படுத்தும் சிலரை சந்தித்திராமல் வேறு வழியில் சென்றிருக்கவும் முடியுமே..
ஆனால் வாழ்க்கை நமக்களித்திருப்பதோ வெறும் எழுதுகோல் (pen) மட்டுமே.. எழுதியதை திருத்துவதற்கு அழிப்பான் (rubber) யாருக்குமே வழங்கப்படுவதில்லை. சொல்லி விட்ட வார்த்தைகள், செய்து விட்ட செயல்கள், மனதினுள் புகுந்த சிந்தனைகள், பார்வையில் பதிந்த முகங்கள், பழக்கத்தால் ஏற்பட்ட உணர்வுகள், புரியாமல் செய்து விட்ட தலையசைப்புகள், அறியாமல் எடுத்து வைத்துவிட்ட காலடிகள், நடந்தேற அனுமதித்து விட்ட நிகழ்வுகள் என்று எதையுமே திருத்தி அமைக்கும் வாய்ப்பு மனிதனுக்கு வழங்கப்படுவதில்லை. அவ்வாறு நடந்தவைகளின் விளைவுகளும் அவை சார்ந்த வலிகளும், உணர்வுகளும் உடலுடன் ஒட்டிக் கொண்டே வரும் நிழலைப் போல என்றும் மனதினுள் நிரந்தர இடம் பிடித்து, அவ்வப்போது 'நானிருக்கிறேன்..' என்று கைகளை உயர்த்தி நினைவூட்டிக் கொண்டே தான் இருக்கின்றன.
நாம் ஆறி விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கும் காயங்களின் தழும்புகளை மேற்புறம் மெல்ல கீறி, மீண்டும் அதே வலியை ஏற்படுத்தும் சக்தி பல கடந்த கால ஞாபகங்களுக்கு அதிகம்.. உண்மை என்னவென்றால், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்பட்ட பல காயங்கள் என்றும் ஆறுவதே இல்லை.. மேற்புறம் தழும்புகளாக மாறியிருந்தாலும் உள்ளே காயத்தின் சுவடுகளோ அப்படியே தான் இருக்கின்றன. வலி ஏற்படுத்தும் அத்தகைய நினைவுகளை கிடப்பில் போட என்ன தான் முயன்றாலும், அவை திரும்ப திரும்ப வந்து மனக் கதவை தட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் கதவை திறந்து பார்த்துவிட்டு, 'ஓ!! நீ தானா..' என்று கதவை அடைத்து விட்டு, வேறு வேலைகளில் கவனம் செலுத்த முயன்றாலும், அவை கொஞ்சம் கூட சளைக்காமல் திரும்பவும் மனக் கதவை தட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. காலப்போக்கில் அவற்றை கண்டுக் கொள்ளாமல் புறக்கணிக்க (ignore) கற்றுக் கொள்ளலாமே தவிர அவற்றை முழுவதுமாக மனதிலிருந்து தகர்த்தெறிய முடிவதில்லை.
மீண்டும் மீண்டும் தலை காட்டும் அத்தகைய ஞாபகங்களை, வாழ்வில் செய்த தவறை திரும்ப செய்யாதிருக்க விடுக்கும் எச்சரிக்கையாகவே நான் எடுத்துக் கொள்வதுண்டு. ஒரு விதத்தில் அவ்வாறான நினைவூட்டுதல் அவசியமென்றும் நான் கருதுவதுண்டு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். 'ஞாபகங்கள் இங்கே அழிக்கப்படும்' என்னும் அறிவிப்பு பலகையோடு கடையொன்று திறக்கப்பட்டால், உலகின் அத்தனை மனிதர்களும் அங்கே வரிசையில் நிற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
Saturday, December 5, 2009
காட்சிகளும் அதன் பதிவுகளும்..
வாழ்வின் நிகழ்வுகள் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதமாக புரிந்துக் கொள்ளப்படும் தருணங்களில், தனது புரிந்து கொள்ளுதல்களை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாமல் அவரவர் சிந்தனைக்கேற்ப மனதிற்குள்ளேயே அவற்றை அசைபோடுவது தான் பெரும்பாலும் குழப்பங்களுக்கும், மன வருத்தங்களுக்கும் காரணமாக அமைகின்றது. சில நேரங்களில் அது பிரிவிலும் கூட போய் முடிவதுண்டு.
எவ்வளவு தான் நம்மால் மற்றவர் நிலை அறிந்து, அவர் நோக்கில் நடந்தவைகளை அணுகும் மனமிருந்தாலும், ஒரு சிறு நூலிழை தவறாவது புரிந்து கொள்ளுதலில் ஏற்பட்டு விடுவதற்கு சாத்தியமுண்டு. சுய உணர்வுடனான பார்வை கொண்டு சிந்திக்கும் மனதை பொது உணர்வு நிலைக்கு கொண்டு செல்லுதல் அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் சில விஷயங்கள் நமது உணர்வுகளை நேராக பாதிக்கும் போது, அவற்றை வேறு கண் கொண்டு பார்க்க வேண்டுமென்று கூட நம் மனதிற்கு பெரும்பாலும் தோன்றுவதில்லை..
மற்றவர் செயல்பாடுகளோ வார்த்தைகளோ மனதை பாதிக்கும் போது, மௌனமே பலரின் மறுமொழியாக இருகின்றது. அப்படிப்பட்ட கணங்களில், அவ்வாறு நடந்ததற்கான விளக்கங்களை வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ளாமல், கற்பனை உலகத்தில், தனக்கான நியாய தர்மங்களைக் கொண்டு மனதிற்குள்ளேயே அவற்றை ஆராய முயற்சிக்கின்றது மனம்.
நெருக்கமான உறவுகளில் இது அடிக்கடி நிகழ்வதும் உண்டு. 'இவ்வளவு நெருக்கமாக பழகியும் அவன்/அவள் எப்படி அவ்வாறு சொல்லலாம் அல்லது செய்யலாம்..' என்று ஆதங்கம் கொள்ளும் மனமோ, 'இவ்வளவு நெருக்கமாக பழகிய அவன்/அவள் அப்படி சொல்ல அல்லது செய்ய என்ன காரணமிருக்கலாம்..?' என்று சிந்திக்க சில நேரங்களில் தவறி விடுவதுண்டு. நடந்தவைகளின் பாதிப்புகளை பற்றி கலந்துரையாடவும், அவற்றிற்கான காரணத்தை கண்டறியவும் நாம் பெரும்பாலும் முயற்சி எடுப்பதில்லை.
பல நேரங்களில் இத்தகைய யூகத்தின் அடிப்படையிலான சிந்தனை, 'அந்த கட்டிடம் வெள்ளை வண்ணம் கொண்டு நிறமூட்டப்பட்டிருகின்றது (paint)..' என்று சொல்பவரிடம், 'இல்லை.. அது சிவப்பு வண்ணம் கொண்டே நிறமூட்டப்பட்டிருகின்றது..' என்று யோசிக்காமல் அடித்து சொல்வதை போன்றது தான். அவர் கட்டிடத்தின் முன்புறமிருந்து பார்த்திருக்க, நீங்கள் கட்டிடத்தின் பின்புறமிருந்து பார்த்திருக்கலாமல்லவா.. முன்புறம் வெள்ளை வண்ணம் கொண்டும், பின்புறம் சிவப்பு வண்ணம் கொண்டும் நிறமூட்டப்பட்டிருக்கலாமல்லவா.. 'நீ எந்த பக்கமிருந்து பார்த்தாய்?' என்று கேட்பதற்கு பல நேரங்களில் நாம் தவறிவிடுகின்றோம்.
கற்பனை அழகு தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல. தனக்கான கருத்துக்களை கொண்டிருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் பிறர் தரப்பின் எண்ணங்களையும் கேட்டறிந்துக் கொள்ள தயாராக இருப்பதென்பது மிக முக்கியம். நமது உள்ளுணர்வுகளுக்கு மட்டுமல்லாது, பிறர் சொல்வதற்கும் செவி கொடுப்போமே.
நமது புரிந்து கொள்ளுதல் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கொள்ளும் ஆரோக்கியமான விவாதங்களும், கலந்துரையாடல்களும் எப்போதுமே நல்லது தான். அது உறவுகளில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளும்.
Wednesday, December 2, 2009
இலக்குகள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை..
பிரிவினை தவிர்க்க என்ன தான் முயன்றாலும், பலருக்கு தனது இலக்கை விடுத்து வேறொரு திசையில் பயணிக்க மனம் சம்மதிப்பதில்லை. அதற்கான சுதந்திரத்தையோ அல்லது வாய்ப்பையோ வாழ்க்கை அவர்களுக்கு வழங்குவதுமில்லை. ஏனென்றால் அவர்களுக்கான இலக்கு குறித்த திசையில் செய்ய வேண்டிய சில பணிகள் காத்துக் கிடக்கின்றன. எனவே நினைத்த நேரத்தில் விரும்பியவாறு சில முடிவுகளை அவர்களால் எடுக்க முடிவதில்லை. ஆனால், 'என் வாழ்வில் இணைந்து என்னோடு வந்து விடு..' என்று தன்னுடன் பழகியவர்களிடம் அவர்கள் விடுக்கும் அழைப்பானது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளவும் படுகிறது. அறிமுகமில்லாத முகங்களுடன் பயணிக்க பயந்து, அத்தகைய அழைப்பை ஏற்று சிலர் தான் செல்ல வேண்டிய பாதையை மாற்றி, அவர்களுடன் இணைந்தும் கொள்கின்றனர்.
ஆனால் வேறு சிலரின் வாழ்க்கையோ சற்று கடினமானது. 'என்னை அழைத்து செல்லுங்கள்.. நானும் உங்களுடன் வருகிறேன்', என்று தானே முன்வந்து கூறினாலும், இவர்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடன் நெருங்கி பழகியவர்களோ, 'எனது வாழ்வில் நீ இடம் பெறுவது கடினம்', என்று எளிதாக சொல்லி நிராகரித்து விடுகின்றனர்.
பிரிவை நினைத்து இவ்வாறாக சிலர் கலங்க, இவர்களைப் பிரிந்தவர்களோ அதைப் பற்றிய எந்தவித உணர்ச்சியுமின்றி, 'நான் போய் வருகிறேன்' என்று விடைப் பெற்று, அவர்களது வழியில் சென்று விடுகின்றனர். அவர்களுக்கு பிரிவை பற்றி சிந்திக்கவோ, மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படவோ நேரமில்லை. அவர்களுக்குண்டான வாழ்விலும், போய் சேர வேண்டிய பாதையிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். 'நான் உன்னுடன் கூடவே வருவேனென்று எதற்காக நீ கனவு கண்டுக் கொண்டிருக்கிறாய்.. விழித்து கொள்.. இதோ நிஜ உலகம்.. சந்தித்துக் கொள்!! நான் போய் வருகிறேன்', என்று எளிதாக சொல்லி, புன்னகையோடு கையசைத்து, மிக வேகமாக பார்வையிலிருந்து விலகிவிடுகின்றனர்.
ஆனால், 'இவர்' தன்னுடன் கடைசி வரை வருவார் என்று கனவுகளில் கோட்டை கட்டிய இவர்களோ, தம்முடன் பழகியவர்களைப் பிரிந்து வேறு வழியில் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். நன்றாக பழகி, திடீரென்று சென்றுவிட்டவர்களின் பிரிவு, உணர்வளவில் பலவீனமான இத்தகைய மனிதர்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றது. அவ்வாறான கணங்களில், ஏமாற்றம் கலந்த குழப்ப நிலையுடன் எந்த திசையிலும் செல்ல தோன்றாமல் தற்காலிகமாக அந்த இடத்திலேயே நின்றும் விடுகின்றனர்.
பிரிந்து சென்றவர் என்றாவது திரும்பி வந்தால், மீண்டும் அவருடன் இணைந்து தமது பயணத்தை தொடரலாமென்று ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் கால வரையற்று காத்திருக்கவும் இவர்கள் தயங்குவதில்லை. ஆனால் உண்மையோ பல நேரங்களில் கசப்பானது.. ஏற்றுக் கொள்ள இயலாதது.. வேதனையை தரக் கூடியது.. மனதை காயப்படுத்தக் கூடியது.. பிரிந்து சென்றவர்கள் பெரும்பாலும் திரும்பி வருவதே இல்லை. அவர்கள் தம்முடன் அறிமுகமாகும் வேறு எவருடனோ மகிழ்ச்சியுடன் அவர்களது இலக்கின் திசையில், எந்தவித பின்னோக்கிய பார்வையுமின்றி பயணத்தை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.
அதை புரிந்துக் கொண்டவர்கள், காத்திருந்தது போதுமென்று மீண்டும் பயணத்தை தொடர்கின்றனர். சிலருக்கோ அது புரியும் கணங்களில் அதனை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தமது பயணத்தை அவ்விடத்திலேயே முடித்துக் கொள்ளவும் முயல்கின்றனர். ஆனால் இத்தகைய மனிதர்கள் அறிந்துக் கொள்ளாத ஒரு உண்மையென்னவென்றால், இவர்கள் செல்ல வேண்டிய திசையிலேயே இன்னும் சில மைல்களுக்கு அப்பால் இவர்களுடன் பயணத்தில் இணைந்து, வாழ்க்கையை சுவாரசியமாக்கி, பயணத்தை இலகுவாக்கி, கிட்டத்தட்ட இவர்களது இலக்கு வரை கூடவே வருவதற்கும் தயாராக பயணியொருவர் காத்திருக்கிறார் என்பது தான். பலர் அவ்வாறானதொரு பயணியை சந்திக்கும் வரை பொறுமையுடன் தமது திசையில் செல்ல தயாராக இல்லையென்பது கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.
குறிப்பு: பாத்தோம், படிச்சோம், போனோம்னு இல்லாம ஏதாச்சும் சொல்லிட்டு போங்க :-)
Monday, November 30, 2009
சார்ந்திருத்தலைப் பற்றியது..
தான் ஒரு மேன்மை (superior) பொருந்திய உயிரினம் என்பதனால் தன்னை விட அறிவில் குறைந்த உயிரினங்களை எளிதாக தனது ஆளுமையின் கீழ் கொண்டு வர முடிகின்றது அவனால். அதன் மூலமாக தனது சுய தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள அவன் தயங்குவதில்லை. ஆனால் கட்டுப்படுத்த முடியாமலும், தனது புத்திக்கு விளங்காமலும் அவனது மனம் இருப்பதாலோ என்னவோ, தனது மனச் சுமைகளையும், மனதளவிலான அழுத்தங்களையும், மன வருத்தங்களையும் அவ்வளவு எளிதாக அவனால் கையாள முடிவதில்லை.
தனது மனச் சுமைகளை இன்னொரு உயிரினதிடமோ அல்லது சக உயிர்களிடமோ இறக்கி வைப்பதெப்படி என்னும் சூட்சுமத்தை மட்டும் அவன் கண்டறிந்து விட்டால், இவ்வுலகின் எல்லா மனிதர்களிடமும் சிரிப்பை மட்டுமே காண முடியும் என்பது நிச்சயம். ஆனால் அப்படியொரு வழியை கண்டறிந்து விட்டால் மனிதனை கையில் பிடிக்க முடியாது என்பதாலோ என்னவோ இயற்கை இன்னும் அந்த வரத்தை மானுடர்களுக்கு வழங்கவில்லை.
மன அழுத்தங்களை மற்றவரிடம் இறக்கி வைக்க வழியில்லாவிட்டாலும், மனச் சுமைகளை பற்றி மற்றவரிடத்தில் பேசுவதன் மூலமாக மனதளவிலான வருத்தங்களையும் மன பாரத்தின் அளவையும் குறைக்க முடியும். எனவே தான் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மானிட வாழ்வின் மிக முக்கியமான அம்சமாகின்றது. தனது மனதை நெருடும் விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் போது, மனதின் பாரம் பாதியாக குறைகின்றது.
அதனால் தான் துயரங்களையும் சோகங்களையும் சந்திக்கும் நேரங்களில், தன்னையும் அறியாமல் மனமானது பகிர்ந்து கொள்ள யாரும் கிடைக்கமாட்டர்களாவென்று ஏக்கம் கொள்கின்றது. மனம் தனது சாதாரண நிலையில் இல்லாத கணங்களில், 'உன் பிரச்சனை என்ன?'... 'என்ன தான் உனது கவலை?' என்று யாரவது கேட்க மாட்டார்களாவென்று பல நேரங்களில் காத்துக் கிடக்கின்றது. வேதனையில் உழலும் மனதிற்கு ஆறுதலான வார்த்தைகள் பேச ஆட்கள் தேவை. மனதின் பாரம் முற்றிலும் இறங்காவிட்டாலும் மனம் லேசானதொரு உணர்வை அடைகின்றது.
வாழ்வின் கடினமான நேரங்களில் உடனிருப்பவர்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கின்றது. மனம் சஞ்சலப்படும் கணங்களில் ஆறுதலாக சில வார்த்தைகளைப் பேசுவோரின் மீது சட்டென்று ஒரு தோழமையுணர்வு பற்றிக் கொள்கின்றது. மன வேதனைகளை இலகுவாக்கும் விதமாக பேசி, சற்றே ஆதரவாக தோள் தட்டி 'நானிருக்கிறேன் கலங்காதே!' என்று சொல்லும் உறவுகளும் நண்பர்களும் தன்னோடு எப்போதும் இருக்க வேண்டுமென்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே தான் நெருக்கமான உறவுகளும், நலம் நாடும் நண்பர்களும் பல நேரங்களில் முக்கியமானவர்களாகின்றனர்
ஒரு விதத்தில் பார்த்தால், சுயநலமும் பொது நலமும் சரி பாதியாக கலந்தவையே உறவுகளும் நட்புகளும் என்பது கொஞ்சம் உண்மையும் கூட. வாழ்வின் பயணத்தை எளிதாக்கிக் கொள்வதற்கே பல நேரங்களில் தனது சக உயிர்களுடன் கை கோர்த்துக் கொள்கிறான் மனிதன். கடினமான பாதையில் பயணிக்கும் போது பயணத்தை இலகுவாக்குவதற்கும், வேதனையான தருணங்களை எளிதாக எதிர் கொள்ளவும் துணையொன்று அவனுக்கு தேவை. சில நேரங்களில் இப்படியொரு சார்ந்திருத்தலிற்கான தேவையென்று ஒன்றில்லாமலிருந்தால், மனிதனை கையில் பிடிக்க முடியாது என்பது மட்டுமல்ல, சில உறவுகளிலும் நட்புகளிலும் நெருக்கம் அதிகரித்திருக்குமா என்பதும் அவை இன்னும் தொடருமா என்பதும் கூட ஒரு கேள்விக் குறி தான்..
குறிப்பு: படித்து முடித்ததும் உங்கள் மனதிலென்ன தோன்றுகிறதோ, அதை கருத்துகளாக இங்கே விட்டு செல்லலாமே.. :-)
Wednesday, November 25, 2009
பின்னோக்கி நகரும் நினைவுகள்..
பலரின் இயக்கங்கள் வேகம் கலந்த சுறுசுறுப்புடன் இருக்க, ஒரு சிலரோ சுவாசம் போல் வாழ்க்கையோடு ஒன்றி போய்விட்ட பிரயாணமென்பதாலோ என்னவோ எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் உள்ளுணர்வின் உந்துதலுக்கு கட்டுப்பட்டு இயந்திரங்களை போன்று நடந்து சென்று கொண்டிருந்தனர்.
எனக்கு முன்பதிவில் ஒதுக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி வந்ததும், அதனுள் நுழைந்து எனது படுக்கை எண் என்கிருகிறதென்று கண்களால் தேடிக் கொண்டே முன்னேறினேன். எனக்கான படுக்கை வந்ததும், அதுதானாவென்று மீண்டும் ஒரு முறை சந்தேகப்படும் படியாக ஏற்கனவே பலர் அமர்ந்திருந்தனர்.
அங்கிருந்தவர்களில் தனது ஐம்பதுகளிலிருந்த அந்த பெண்மணி என் முகம் பார்த்து புன்னகையோடு, "உங்களோட சீட்டுங்கலா(seat) தம்பி" என்றார். நான் பதிலுக்கு புன்னகைத்து 'ஆம்' என்பது போல் தலையசைத்தேன்.
"என் பையன ஏந்தி விட வந்திருக்கோம், ட்ரெயின் கெளம்புரதுக்குள்ள நாங்க ஏறங்கிடுவோம்.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க தம்பி..", என்றார். சொல்லும் போது எழுத்துக்களில் விவரிக்க முடியாததொரு சிநேகம் கலந்த பாவனைகளை அவர் முகம் வெளிப்படுத்தியது. நான் எனது புன்னகையை பெரிதாக்கி, "இட்ஸ் ஓகே.. நோ ப்ராப்ளம்ஸ்.." என்றேன். 'அட இங்க பாருடா.. துரை இங்கிலீஷ் பேசறாரு..' என்று என்னை நானே மனதிற்குள் கிண்டல் செய்து கொண்டேன். தேவை இல்லாத நேரங்களில் ஆங்கிலம் பேசுவதை முடிந்த வரை தவிர்க்க முயல்பவன் நான். ஆனாலும் என்னையுமறியாமல் சில நேரங்களில் ஆங்கிலம் என் நாவில் வந்து விடுவதுண்டு.
பையனென்று அவர் கூறிய அந்த இளைஞனுக்கு இருபத்தியிரண்டு வயதிருக்கும். சீவப்பட்டிருந்த தலைமுடி முன்புறம் லேசாக கலைந்திருந்தது. அந்த பெண்மணியோடு மேலும் மூன்று பெண்கள் அமர்ந்திருக்க, ஜன்னல் ஓரத்தில் வெளியில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தவர் அவனது அப்பாவாக இருந்திருக்க வேண்டும். அவ்வபோது மௌனம் நிலவினாலும் அந்த பெண்களின் பெரும்பாலான வார்த்தைகள், 'ஒழுங்கா சாப்பிடு.. போறப்ப வர்றப்ப கவனமா இரு.. யார்டயும் சண்டை போட்டுகிட்டு இருக்காத.. அப்பப்போ போன் பண்ணு..' என்பதாகவே இருந்தது. அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை, பாசம், அன்பு என்று எல்லா உணர்வுகளும் நிரம்பி வழிந்தன. அவர்கள் சொல்வதற்கெல்லாம் அவன் தலையாட்டிக் கொண்டிருந்தாலும், சுற்றி இருப்போர் கவனம் அவ்வப்போது அவனை நோக்கி இருந்ததால் அவன் முகத்தில் கொஞ்சம் அசௌகர்யம் தென்பட்டது.
அந்த காட்சியை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது அது ஒரு நடுத்தர வர்க்க குடும்பமென்றும், அந்த இளைஞன் தான் அந்த குடும்பத்தின் ஒரே நம்பிக்கையென்றும். முதல் முறையாக வேலைக்காக வெளியூர் போகிறான் என்பதையும் என்னால் சரியாக யூகிக்க முடிந்தது. இப்படித்தான் பல குடும்பங்கள் இன்று கையில் கிடைக்கும் ஒரே நம்பிக்கை கயிறு பற்றி எப்படியாவது மேலெழுந்து வந்துவிடலாமென்று அவர்களாலான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று தானே எனது பயணமும் தொடங்கியது. அன்று பயணித்த ரெயில் சில மணி நேரங்களில் தனது இலக்கை அடைந்து நின்றுவிட்டாலும், கடமைகளை நிறைவேற்ற நான் கொண்ட பயணமோ ஐந்தாண்டுகளாகியும் இன்னும் தொடர்ந்து கொண்டேதானிருகின்றது. ஆனால் அலுப்பொன்றும் தோன்றவில்லை இதுவரை. ஒருவேளை பிறப்பின் காரணமறிந்ததாலோ என்னவோ எனது வாழ்வின் பயணம் எப்போதும் என்னை மகிழ்ச்சியிலேயே ஆழ்த்தி வருகின்றது..
அந்த பெண்கள் தான் நிறைய பேசிக் கொண்டிருந்தனர். அவனது தந்தையோ அமைதியாக ஜன்னல் வழியே அவனது ஒரு கரத்தின் மேல் தனது கரத்தை வைத்து நின்றுக் கொண்டிருந்தார். பெண்கள் எப்போதும் அன்பையும் பாசத்தையும் எளிதாக வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆண்கள் காட்டும் பாசமோ மலர்களுடன் கொஞ்சும் காற்றைப் போன்றது. அவ்வளவாக அது வெளியில் தெரிவதில்லையென்றாலும் எப்போதும் அந்த கொஞ்சலும் உறவாடலும் இருந்துக் கொண்டேதானிருக்கும். வெகு சில நேரங்களிலேயே மலர்கள் லேசாக அசைந்து காற்றிருப்பதை காட்டிக் கொடுக்கின்றன. என்னவோ தெரியவில்லை, சிறுவயதிலேயே இறந்து விட்ட என் தந்தையின் ஞாபகங்கள் திடீரென்று சில கணங்கள் என் இதயம் தொட்டு சென்றன. மையினால் எழுதப்படாமலேயே சில கவிதைகள் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன.
ரெயில் புறப்பட தயாராக, அந்த பெண்கள் கீழே இறங்கி ஜன்னலருகில் நின்றுக் கொண்டனர். ரெயில் மெதுவாக நகர ஆரம்பிக்க, கையசைத்து விடை கொடுத்தவண்ணம் கூடவே சிறிது தூரம் நடந்து வந்தனர். ரெயிலின் வேகம் மெதுவாக அதிகரிக்க, பிடி தளர்த்தியிருந்த அவன் தந்தையின் கரம் மீண்டும் அவன் கரங்களை அழுத்தமாக பற்றி, 'பாத்து பத்தரமா இருப்பா..' என்று அவன் காதுகளில் மெதுவாக சொல்லி விடை பெற, அவன் தனது கையைப் பார்த்தான். கசங்கிய நூறு ரூபாய் தாளொன்று அவன் உள்ளங்கையில் இருந்தது. அவனையுமறியாமல் அவன் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் மட்டுமல்ல.. உள்ளுக்குள் நானும் தான்.
ரெயில் வேகமாக முன்னோக்கி நகர, என் நினைவுகளோ பின்னோக்கி நழுவத் தொடங்கியிருந்தன.
குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)
Sunday, November 22, 2009
சிறிய இடைவெளிகள் அழகு தான்..
குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)
Saturday, November 21, 2009
நெருக்கமான உறவுகளைக் கொண்டாடுங்கள்..
Thursday, November 19, 2009
சராசரிகளை தாண்டியதொரு உணர்வு..
Friday, November 13, 2009
சின்னதாய் ஒரு பாதிப்பு..
எப்போதும் போலல்லாது அன்று அந்நிய வீதியில் நுழைந்ததை போன்றதொரு உணர்வு திடீரென்று என் தேகம் வருடியது. தினந்தோறும் கடக்கும் வீதி தான். ஆனால் இன்றென்னவோ வெறிச்சோடி, உற்சாகம் இழந்து, சற்றே பாலைவனத்தின் சாயல் கொண்டு, சோக முகம் போர்த்தி சிரிக்க முயன்று கொண்டிருந்தது.. 'நான் செல்லும் வீதி தானே இது' என்று மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டேன்..
Sunday, September 27, 2009
எல்லையற்ற தேடல்கள்..
சமூகத்துடனான எனது தொடர்பில் அவ்வபோது விழும் இடைவெளி இப்போதும்.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத தனிமை என் அனுமதி கேட்காமலேயே என்னை சூழ்ந்து கொள்ளும் கணங்களில், என்னையும் அறியாமல் இத்தகைய இடைவெளி விழுந்து விடுகிறது..
எதையோ எங்கோ தொலைத்து விட்டு, தொலைத்தது எதுவென்றும் புரியாமல், தொலைத்த இடம் எங்கென்றும் தெரியாமல், ஆழ்கடலில் இரவும் பகலும் தன்னந்தனியே வலைவீசி தேடும் படகோட்டியைப் போன்றே நானும் தேடுகின்றேன். ஏன் தேடுகின்றேன்.. எதை தேடுகின்றேன்.. பல கேள்விகளுக்கு எப்போதும் விடை மட்டும் கிடப்பதே இல்லை. எல்லையற்று விரிந்து கிடக்கும் வாழ்க்கை கடலின் அடியாழத்தில் மனம் நடத்தும் தேடலோ நின்றபாடில்லை. வலையில் சிக்கும் எதுவும் தேடலின் நோக்கத்தை நிறைவு செய்வதாக இல்லை. எவ்வளவு காலம் தான் இந்த தேடல் தொடர போகின்றதென்று தெரியவில்லை..
சில நேரங்களில், எந்த நோக்கமும் இன்றி கிடைப்பதை எடுத்துக்கொண்டு முகத்தில் புன்னகையோடு கரையேறும் சக படகோட்டிகளை பார்க்கும் போது, நாமும் ஏன் அவ்வாறு இருக்க முடிவதில்லையென்று சின்னதாய் ஒரு பொறாமை துளிர்விடுகின்றது.. பல நேரங்களில், அவர்களை பார்த்து, 'என்ன சாதித்து விட்டோமென்று கரையேறுகிறார்கள் இந்த முட்டாள்கள்' என்றொரு ஏளன சிரிப்பு தான் எழுகின்றது..
என்றும் போல் இன்றும் மனதிற்குள்ளேயே அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் போது, என் தலை மேல் தன் இருப்பிடம் நோக்கி பறந்து சென்ற பெயரறியா பறவையொன்று, 'எதை சாதிக்க உன் வாழ்வை இழந்து கொண்டிருகின்றாய்..", என்றொரு ஏளன சிரிப்போடு மெல்ல என் காதுகளில் சொல்லி சென்றது, "உன் வாழ்க்கை கரையில் உள்ளது.. கடலில் அல்ல!!"
மெல்ல வானத்தை பார்க்கிறேன். அது விடியலிற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது. நானும் தான்..
Sunday, July 19, 2009
படர்ந்துவிட்ட வெறுமை..
சிரிப்பொலிகள் மறைந்து, தூரத்தில் ஏதோ ஒரு குழந்தை அழும் ஓசையும் துல்லியமாய் கேட்கும் அளவிற்கு படர்ந்துவிட்ட அமைதி.. இறைந்து கிடந்த துணிகளையும் பொருட்களையும் எடுத்து வைத்து, சுத்தம் செய்த பிறகு துளியும் தெரியவில்லை வந்து போனவர்களின் பதிவுகள்..
மீண்டும் புத்தம் புதிதாய் மாறிவிட்ட அறை.. அறைகளின் கடந்தகால பதிவுகளை அழிக்க துடைப்பம் போதும்.. ஆனால் வலிகளையும் அவஸ்தையையும் ஏற்படுத்தும் உன் நினைவுகள் மனதினுள் இன்னும் இறைந்தே கிடக்கின்றன.. அவற்றை துடைக்க முயற்சித்தாலும் முடியவில்லை..
வெறுமை படர்ந்திருப்பது அறையில் மட்டுமல்ல.. என் மனதிலும் தான்..
Saturday, July 18, 2009
ஒரு பார்வை..
வானினின்று பார்க்கப்படும் எல்லா காட்சிகளுமே அழகு தான்.. அருகில் நெருங்க நெருங்க, அழகின் வசீகரம் சில நேரங்களில் ஆச்சரிய குறியில் இருந்து கேள்விக் குறியாக மாறுவதுண்டு.. பல நேரங்களில் அந்த அழகென்பது தூரத்தின் மாயாஜாலம்..
பல நேரங்களில் நாம் சந்திக்கும் மனிதர்களும் இந்த மாதிரி தான்.. பல நட்புகள் துரத்தில் இருக்கும் வரை மட்டுமே இனிக்கின்றன.. அருகில் நெருங்கும்போது அவற்றின் நெருக்கம் கூடுவதற்கு பதிலாக குறைகின்றன.. எல்லா நட்புகளையும் நான் குறை சொல்லவில்லை. எவ்வளவு தான் அருகிலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியும் இடங்கள் இருக்க தானே செய்கின்றன..
Friday, July 17, 2009
மலரை போன்றொரு வாழ்வு..

பூக்களுக்கு தெரிவதில்லை மாலையில் அவை உதிர்ந்து விடுமென்று.. அதனால் தானோ என்னவோ அவை பளிசென்ற புன்னகையுடன் அழகை வெளிப்படுத்துவதிலும், காற்றின் இசைக்கு நடனமாடுவதிலும், தன்னை சூழ்ந்திருக்கும் காற்றிற்கு மணம் சேர்ப்பதிலும் எந்த குறையும் வைப்பதில்லை... பனித்துளிகளைத் தாங்குவது முதல் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேனூட்டுவது வரை எல்லாவற்றையும் ஒரு புன்சிரிப்புடன் செய்கின்றன..
மாலையில் மடிவதற்குள் முடிந்தவரை பலரின் முகங்களில் புன்னகையையும், பூரிப்பையும் ஏற்படுத்தி, பலரின் வாழ்வை புத்துணர்வூட்டி, சாவதற்கு முன் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்தே மடிகின்றன..
ஒருவேளை, அவை அடுத்த நாள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதாலேயோ என்னவோ அவை இருக்கும் ஒரு நாளை வாழ்ந்து பார்த்துவிடுகின்றன..
எவ்வளவோ நாட்கள், நாமும் ஏன் அப்படி வாழ முடிவதில்லை என்று வானம் பார்த்து நிலவொளியில் யோசித்ததுண்டு.. அப்படி வாழ நான் இதுவரை எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறமுடியவில்லை... ஆனாலும் எனது முயற்சிகள் என்னவோ அடுத்தடுத்து செடிகளில் பூக்கும் மலர்களை போல தொடர தான் செய்கின்றன..
Saturday, July 4, 2009
ஐந்தறிவு ஜீவன்கள்...
அவர் வாசலை கடக்கும் முன் திடீரென்று உதைபட்டது, வாசற் கதவோரம் கட்டப்பட்டிருந்த அவர் வீட்டு நாய். "சனியன்.. நடு வழியிலே நின்னுகிட்டு!!", என்று அடக்கி வைத்திருந்த கோபத்தை அந்த நாய் மீது காட்டினார்.. 'அட பாவி.. எல்லா நாளும் அந்த நாய் அங்க தானடா நிக்குது.. இன்னைக்கு மட்டும் ஏன் அது உனக்கு புதுசா தெரியுது??', கேட்க வேண்டும் போல் இருந்தது எனக்கு..
உதைபட்ட நாய், மெல்லிய விம்மலுடன் விலகி நின்று அவரைப் பார்த்துக் குரைத்தது .. 'யோவ்.. நீ தான இங்க கட்டி போட்ட, இப்போ நீயே உதைக்கிறியே.. இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...?', என்று அது கேட்பது போல் இருந்தது.. பின்னர் மாலையில் அவர் சாப்பாட்டு தட்டோடு வருகையில், வழக்கம் போல் வாலாட்டி கொஞ்சியது..
சில மனிதர்களின் வெளிப்படுத்தப்படாத கோப உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக இருப்பது இந்த ஐந்தறிவு ஜீவன்கள் தான்... 'மத்தியானம் தானே உதைச்சான் அந்தாளு.. அவன் கிட்ட போய் வாலட்டுறியே, உனக்கு வெட்கமா இல்ல..?', என்றா கேட்க முடியும் அந்த நாயிடம்.. 'என்ன செய்யறது.. அவன் சோறு போடுறானே..' என்று சொன்னாலும் சொல்லும்!!
குறிப்பு: இதைப் பற்றிய ஒரு கவிதையை நீங்கள் இங்கே படிக்கலாம்...
Friday, July 3, 2009
பண மோகத்தை கொஞ்சம் களையலாமே..
பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதென்னவோ உண்மை தான்.. ஆனா அதுக்காக பாசத்தை கொலை செய்யவுமா அனுமதிக்கணும்? வாழ்க்கையிலே என்ன தான் எல்லாத்தையும் பணத்தை வச்சு வாங்கலாம் அப்படினாலும், வாங்க முடியாத சில விஷயங்கள் இன்னும் இருக்க தான் செய்கின்றன.. என்ன அவை உணர்வு சம்பந்தப்பட்டவை.. பொருள் மற்றும் பண மோகத்திலே இருக்கிறவங்களுக்கு அதெல்லாம் எங்க புரிய போகுது..
படுக்க மெத்தை வாங்கலாம் ஆனா தூக்கத்தை வாங்க முடியாது (உடனே 'தூக்க மாத்திரை வாங்கலாம்' அப்படினு மொக்க நகைசுவை அடிக்காதீங்க)... அது மாதிரி தான்.. பணத்தை வச்சு எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனா உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களை பணத்தை வச்சு வாங்க முடியாது.. அதனால மற்றவங்க உணர்வுகளை மதியுங்கள்.. மதிக்கவில்லை என்றாலும் மிதிக்காமல் இருக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்.. பட்டும் படாம சொல்லணும் அப்படினு தான் ரொம்ப மேலோட்டமா சொல்லி இருக்கேன்..
வேற என்ன.. அறிவுரை அவ்வளவு தான் :-)
Monday, June 29, 2009
மங்கிய இரவில் சில பதிவுகள்..
கலைந்த தலையும், ஒளிவிழந்த முகமும், சற்றே அழுக்கான உடையுடனும் அமர்த்திருந்த அந்த பெண்மணியை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிடலாம், ஆழ்ந்த கவலையுடன் எங்கே போகிறோம் என்றே தெரியாத ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று..
இரவின் மௌனத்தைக் கலைத்து மெல்லிய சலனத்தை மனதினுள் ஏற்படுத்தியது அந்த பெண்மணியின் சோக காட்சி.. எழுந்து போய் அந்த பெண்மணியின் அருகில் அமர்ந்து, 'ஏன் இவ்வளவு சோகம்? மனச்சுமையை பகிர்ந்து கொள்ள ஆளில்லை என்றால் என்னிடம் சொல்லி உங்கள் மனதின் பாரத்தை கொஞ்சம் இறக்கி வையுங்களேன்..' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது..
இரவின் நிசப்தத்தை மெலிதாய் கிழித்துக்கொண்டு எனது ரயில் மெல்லமாய் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியது.. கனமான இதயத்துடன் நானும்..
Wednesday, June 24, 2009
பரவசமும் பாதிப்பும்..
ஒருவேளை அத்தகைய உறவுகள் உள்ளுக்குள் சில எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திவிடுவதாலேயோ என்னவோ அவை மனதிற்கு கொஞ்சம் அவஸ்தையையும் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றன..
நன்றாக பழகும் சிலர் திடீரென்று பழகும் விதத்தில் வித்தியாசம் காட்டும் போது அதை என்னவோ மனம் ஏற்க மறுக்கின்றது.. 'இது இப்படி தான் வாழ்க்கையில் நடக்கும்.. எந்த ஒரு நட்பும் அல்லது உறவும் நிரந்தரமில்லை ' என்று எவ்வளவு தான் தெரிந்தாலும், உணர்வுகளுக்கு அது புரியவா போகின்றது???
என்ன செய்வது!! 'இதுவும் கடந்து போகும்..' என்று பொறுமையாக இருக்க வேண்டியது தான் :-)